PUBLISHED ON : மார் 19, 2026 07:23 AM

நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள், மிக மெல்லிய படிகத்தைப் பயன்படுத்தி, நீலம் மற்றும் புற ஊதா ஒளியை வியக்கத்தக்க துல்லியத்துடன் கட்டுப்படுத்தும் நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.
'காப்பர் இண்டியம் தியோபாஸ்பேட் ' என்ற இந்தப் படிகத்தின் தடிமனைக் குறைக்கும்போது, அதனுள் இருக்கும் தாமிர அயனிகளின் இடப்பெயர்ச்சியால் அதன் ஒளிவிலகல் திறன் 25 சதவீதம் வரை மாறுகிறது.
எவ்விதச் சிக்கலான கருவிகளும் இல்லாமல், இந்த புதிய படிகத்தின் குறைக்கப்பட்ட தடிமனை வைத்தே, புற ஊதா கதிர்கள் போகும் திசையை விஞ்ஞானிகளால் கட்டுப்படுத்த முடிகிறது. இந்தப் பண்பு, குறைகடத்திகளைத் தயாரிக்கவும், மிகச் சிறிய வடிவில் அதிவேகத் தகவல் தொடர்பு சாதனங்களை உருவாக்கவும் உதவும்.
ஃபெரோ எலக்ட்ரிக் பொருட்களில் உள்ள அயனிகளைக் கொண்டு ஒளியையே செதுக்க முடியும் என்ற புதிய முறையை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. மேலும், இது ஒளிச் சில்லுகளை உருவாக்கும் 'போட்டோனிக்ஸ்' துறையில் ஒரு புரட்சிகரமான மேம்பாட்டை கொண்டுவரும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

