PUBLISHED ON : ஜூன் 27, 2026

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, தொப்பம்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 2014ல், 8ம் வகுப்பு படித்த போது, தலைமையாசிரியராக இருந்தார், சு.கணேசன். மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து, வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டுவார்.
அரசு சார்பில் பள்ளிகளுக்கு இடையே அறிவியல் கண்காட்சி, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். சிறப்பாக செயல்படுவோருக்கு, புத்தாக்க அறிவியல் ஆய்வு பதக்கம் வழங்கி கவுரவிப்பர். அதில் பங்கேற்க பயிற்சி அளித்தார், தலைமையாசிரியர். கடுமையாக முயன்று, மாநில அளவில் வெண்கலப் பதக்கம் வென்றேன்.
இதுபோல், பேச்சு, ஓவியம், நடனம், தடகளம், சதுரங்க போட்டிகளிலும் பங்கேற்க ஊக்குவித்தார், தலைமையாசிரியர். தனியார் பள்ளிகளுக்கு ஈடாக, 'ஸ்மார்ட்' வகுப்பு, கணினி வசதி, துாய்மை கழிப்பறை, பாதுகாப்பான குடிநீர், மரக்கன்றுகள் நடுவது என, கவனம் செலுத்தினார். பள்ளி அருகே பாதுகாப்பு கருதி நெடுஞ்சாலையில், வேகத்தடை அமைக்கவும் ஏற்பாடு செய்திருந்தார், தலைமையாசிரியர்.
தற்போது, என் வயது, 25; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பாடுபட்டு விருதுகள் பெற்ற, தலைமையாசிரியர் சு.கணேசனின் மாணவன் என, சொல்வதில் பெருமை அடைகிறேன். என் உயர்வுகளை, அவர் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
- அ.கவுதம் விக்னேஷ், பொள்ளாச்சி. தொடர்புக்கு: 99761 47207
