PUBLISHED ON : செப் 12, 2026

செப்., 14 - விநாயகர் சதுர்த்தி
மார்கழி திருவாதிரையில் சிவன், நடராஜராக நடனம் ஆடிய நிகழ்வு நடந்தது; திருமால், வாமனராக வந்தது, ஆவணி திருவோணம்; ஆண்டாள் அவதரித்தது, ஆடிப்பூரம்; முருகனுக்கு, வைகாசி விசாகம். சிவபார்வதி இணைந்து நடனமாடியது, தைப்பூசம்...
இப்படி திருவிழாக்கள், நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப் படுகின்றன. ஆனால், விநாயகருக்கு, சதுர்த்தி என்ற திதியில் விழா நடக்கிறது. திதி என்றால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட கோணத்தின் அளவை குறிக்கும். இதில், நான்காவது திதி சதுர்த்தி. 'சதுர்' என்ற சமஸ்கிருத சொல்லுக்கு நான்கு என பொருள். மொத்தம், 15 திதிகள் உண்டு. இதில் நான்காம் திதியான சதுர்த்தியில், விநாயகருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
இதற்கு காரணம் தெரியுமா?
ஒருமுறை, யானை முகம், பெருத்த வயிறு, குள்ள வடிவத்துடன் உடலை துாக்கியபடி விநாயகர் நடந்து செல்வதைப் பார்த்தது நிலா. வெள்ளையாக தன்னைப் போல் விநாயகர் அழகாக இல்லை என, கர்வம் கொண்டது. அந்த கர்வத்தில், விநாயகரைப் பார்த்து கேலியாகச் சிரித்தது நிலா. வந்தது பாருங்கள் விநாயகருக்கு கோபம்...
'நீ பேரழகன் என்ற ஆணவத்தில் தானே சிரித்தாய். உடலில் குறைபாடு உள்ளோரை கேலி செய்வது, மன்னிக்க முடியாத பாவம். எனவே உன் அழகு அழியட்டும்...' என, சாபம் கொடுத்தார் விநாயகர். கணநேரத்தில் சந்திரன் இருண்டு போனான்.
சூரிய, சந்திரர் உதிப்பதை கொண்டே இரவு, பகல் ஏற்படுவதை உயிரினங்களால் புரிந்து கொள்ள முடியும். அது முடியாமல் போனதால் குழப்பமடைந்தனர் தேவர்கள். அவர்கள் விநாயகரை சரணடைந்தனர். உலக நலன் கருதி சாபத்தை நீக்கி, 'மாதம் முழுதும் வெண்மையாக இருக்கும் சந்திரன், இனி ஒரே ஒரு நாள் மட்டும் வெண்மையாக இருப்பான். அடுத்தடுத்து வரும் நாட்களில் தேய்ந்து கொண்டே போய், ஒருநாள் இருளாகி விடுவான். அந்த நாள் அமாவாசை எனப்படும். அதிலும் குறிப்பாக, நான்காவது திதியான சதுர்த்தியன்று சந்திரனை யாரும் வணங்கக் கூடாது. தப்பித் தவறி கண்ணில் பட்டால் ஏற்படும் குறை நீங்க, என்னை வணங்கலாம்...' என்றார் விநாயகர்.
சதுர்த்தியை, வெற்றுத்திதி என்பர். இந்நாளில் உலகிலுள்ள உயிரினங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படும். வேலைகளில் தடங்கல் வரும். இந்த தடங்கலை நீக்கும் சக்தி, விநாயகருக்கு மட்டுமே உள்ளது. எனவே, சதுர்த்தி திதியில், விநாயகரை வணங்குகின்றனர். இந்த திதியில் விநாயகர் பிறந்ததாகவும் நம்புகின்றனர். அதுவே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.
- தி.செல்லப்பா.
