PUBLISHED ON : மே 30, 2026

அன்புள்ள அம்மா...
நான் மலை பகுதி கிராமத்தைச் சேர்ந்த, பழங்குடி பெண். தொலைதுார கல்வி மையம் வாயிலாக, எம்.ஏ., பொருளாதாரம் படித்து, பட்டம் பெற்றுள்ளேன். தற்போது, குரூப் - 1 தேர்வு எழுதுவதற்காக என்னை தயார்படுத்தி வருகிறேன். எனக்கு ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பற்றி, சற்று விளக்கமாக கூற இயலுமா...
- இப்படிக்கு,
தேஷம்மா.
அன்பு தேஷம்மா,
உன்னை நினைத்து நான் பெருமிதப்படுகிறேன். இப்போதெல்லாம், மலைவாழ் பழங்குடி பெண்கள் ஏராளமான துறைகளில் வெற்றி பெறுகின்றனர். நீ குடிமைப் பயிற்சியை தேர்ந்தெடுத்தது, மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
குடிமைப் பயிற்சி குறித்து, நிறைய புத்தகங்கள் வந்துள்ளன. க.அபிராமி எழுதியுள்ள, 'ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற' என்ற சிறிய புத்தகத்தை, தாகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்நுாலின் ஆசிரியர், பிரபல எழுத்தாளர் அகிலனியின் பேத்தியும், தமிழ் புத்தகாலயம் பதிப்பகம் கண.முத்தைய்யாவின் பேத்தியும் ஆவார். தமிழக தலைமைச் செயலராக பணியாற்றி ஓய்வு பெற்ற இறையன்புவும், விரிவான பெரிய புத்தகம் எழுதி உள்ளார்.
எனக்கு தெரிந்தவரை, நான் கேட்டு அறிந்தவற்றை உனக்கு தெரிவிக்கிறேன்.
'பிரிலிமினரி' எனப்படும் முதல் கட்ட தேர்வு, சென்னை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடக்கும்.
ஒவ்வொரு ஆண்டும், 1,000 காலியிடங்கள் வரும். 10 லட்சம் பேர் விண்ணப்பிப்பர்; ஆனால், ஐந்து லட்சம் பேர் கூட தேர்வெழுத வர மாட்டார்கள். ஒரு லட்சம் பேர் கூட, சிரத்தை எடுத்து படித்து, தேர்வு எழுதுவது இல்லை. இதில் சராசரியாக, 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர்.
பிரிலிமினரி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், சென்னையில் முக்கிய தேர்வு எழுத வேண்டும்.
பிரிலிமினரியில் வெற்றி பெற்ற, 20 ஆயிரம் பேர், முக்கிய தேர்வு எழுதினால், அதில், 3,000 பேர் தேர்வு செய்யப்படுவர். இவர்கள், நேர்காணலுக்கு டில்லி செல்ல வேண்டும்.
ஆறு நேர்காணல்கள் இருக்கும். நேர்காணல் குழுவில் இடம் பெறும் ஐந்து பேர், தேர்வர்களிடம் கேள்வி கேட்பர். இக்குழுவில் கட்டாயமாக ஒரு பெண் இருப்பார். தினமும் அரை நாள் மட்டுமே நேர்காணல் இருக்கும் .
இந்த நேர்காணல், இரண்டரை அல்லது மூன்று மாதங்கள் நடைபெறும். ஜனவரியில் ஆரம்பிக்கும் நேர்காணல், ஏப்ரல் வரை நடக்கும். ஜனவரியில் டில்லியில் குளிரும், ஏப்ரலில் வெயிலும் கொல்லும்.
நேர்காணலுக்கு முன்பாகவே, அதில் இடம்பெற உள்ள தேர்வர்கள் குறித்த விபரங்களும், விலாசங்களும் கேட்டு பெறப்பட்டு விடும். பெற்றோர் பெயர், பிடித்த விளையாட்டு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., ஆகியவற்றில் எதை தேர்வு செய்ய விருப்பம், பொழுதுபோக்கு என்ன என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படும்.
நேர்காணல் முடிந்ததும், எய்ம்ஸ் அல்லது வெலிங்டன் மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை நடக்கும். பரிசோனை முடிவுகள் குறித்த சான்றிதழை, யு.பி.எஸ்.சி.,யில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவை அனைத்திலும் வெற்றி பெற்று, ஐ.ஏ.எஸ்., பயிற்சிக்கு தேர்வானால், அது குறித்த கடிதம் வீட்டிற்கு வரும். அந்த கடிதத்துடன், பயிற்சி பெற முசூரி செல்ல வேண்டும். காலை 5:00 முதல் நள்ளிரவு வரை கூட பயிற்சி நடக்கும். ஆறு மாத பயிற்சிக்கு பின், ரேங்க் அடிப்படையில் பணியமர்த்துவர்.
மலைவாசி, நரிக்குறவர்கள் என்றால், 800வது ரேங்க் ஆக இருந்தால் கூட, மிக சுலபமாக பணி ஆணை கிடைத்து விடும்.
- அன்புடன், இந்துமதி.
