PUBLISHED ON : ஜூலை 11, 2026

அன்புள்ள இந்துமதி,
நான், போன ஜென்மத்தில் பெரும்பாவம் செய்திருக்க வேண்டும் அல்லது எனக்குப் பிறந்திருக்கும் பெண் செய்திருக்க வேண்டும். குழந்தை பிறந்த போதே, 'மூளை வளர்ச்சி இருக்காது; உடலசைவு இருக்காது... கை, கால்கள் கட்டை மாதிரி இருக்கும்...' என்று சொல்லி விட்டார், மருத்துவர்.
கண்ணசைவு, உணவு உட்கொள்வது, காலைக் கடன்களைக் கழிப்பது என்று, இவை தான் குழந்தைக்கு உண்டு. நான் தான் அவளைப் புரட்டி உடலுக்கு, 'ஸ்பாஞ்ச் பாத்' கொடுத்து, உடையை மாற்றி, தரையில் விரித்திருக்கும், 'பெட்ஷீட்' மாற்றுவதை எல்லாம் செய்வேன்.
குழந்தையாக இருந்தவள், வளர்ந்து இன்று குமரியான பிறகும், அவற்றை எல்லாம் செய்கிறேன். அவற்றோடு கூட இப்போதெல்லாம் ஒவ்வொரு மாதமும், 'சானிடரி பேடு'ம் மாற்றுகிறேன். பல ஆண்டுகளாக சமையல் மற்றும் வீட்டு வேலைகளோடு, மூளை வளர்ச்சியற்ற என் பெண்ணையும் பார்த்துக் கொண்டதில், எனக்கு முதுகு வலி, இடுப்பு வலி, கை வலி என அனைத்தும் வந்து விட்டன. வயதாகி விட்டதால் வேலை செய்ய முடியவில்லை.
மரக்கட்டை போல் படுத்து இருக்கும், 18 வயதுப் பெண்ணை, தனி மனுஷியாக துாக்க முடியவில்லை. வேறு ஒரு பணியாளரை வைத்து செய்யும் அளவு என்னிடம் வசதி இல்லை. இது போல் ஒரு குழந்தையை பெற்றது என் தவறா... இது என் குற்றம் தான் என்பது போல், என் கணவர் என்னுடன் பேசுவதே இல்லை.
சமீபத்தில், 'இது போல், 16 ஆண்டுகள் இருந்த பையனை, கருணைக் கொலை செய்யலாம்' என நீதிமன்றம் உத்தரவு விட்டதாமே...
எனக்கும் அப்படிப்பட்ட ஒரு உத்தரவு கிடைக்குமா...
- இப்படிக்கு,
கவுசல்யா.
அம்மாடீ கவுசல்யா...
என்ன கேள்வி கேட்டுவிட்டாயம்மா... இப்படி கேட்க உன் மனம் எப்படி துணிந்தது...
உன் பெண், பிறக்கும் போதே அப்படி இருந்தது. அது, அவள் குற்றமா அல்லது உன் தவறா...
பலரும் கீழே விழுந்து, தலையில் அடிபட்டு அல்லது விபத்தில் சிக்கி, 'கோமா' நிலைக்குப் போகின்றனர்.
உன் பெண்ணாவது, கண் திறந்து பார்க்கிறாள்... சாப்பிடுகிறாள்... மல, ஜலம் போகிறாள். மாதவிடாய் வருகிறது.
இவை எதுவுமின்றி எல்லாமே குழாய் வழியாக உட்செலுத்தி, 'மானிட்டர்' வழியாக கவனித்து, சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு, வெறும் உடலாக மட்டுமே இருந்த இளைஞனை, 16 ஆண்டுகளாக நன்றாக பார்த்துக் கொண்டனர், பெற்றோர்.
அதற்கு மேல் இயலாமலும், செலவு செய்ய முடியாமலும் தான் நீதிமன்றம் வாயிலாக கருணைக் கொலைக்கு உத்தரவு பெற்றுள்ளனர், அவன் பெற்றோர்.
அந்த இளைஞன் உடலிலிருந்து ஒவ்வொரு உறுப்புகளாக விலக்கப்படுவதை, முகநுாலில் கண்டு அழுது விட்டேன்.
கவுசல்யா... எல்லாருக்கும் சொல்வது சுலபம்; செய்வது கடினம். உன் நிலைமையில் நீ நினைப்பது தவறு கூட இல்லை; நியாயமும் கூட. உன்னால் செய்ய முடியாமல், உதவிக்கு யாருமற்ற நிலையில் தான் இதைக் கேட்கிறாய். ஆனாலும், பதில் சொல்ல என் மனது தயங்குகிறது மகளே....
ஒரு வேளை, நீயும் நீதிமன்றம் வழியாக உத்தரவு பெறுவாயானால், உன் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியுமா என்று மருத்துவரிடம் கேள். முடியும் என்றால் செய். இதை எழுதக் கூட என் மனம் வலிக்கிறது. எனக்கே இப்படி என்றால் உனக்கு எப்படி இருக்கும் என்பதை யோசிக்கக் கூட முடியவில்லை.
- அன்புடன், இந்துமதி.
