PUBLISHED ON : ஜூலை 04, 2026

பஞ்சசீலம் கிராமத்தில் ஆசிரமம் நடத்தி வந்தார், ஞானி.
ஆசிரமத்தின் பெருமைகளை கேள்விப்பட்டு, சீடனாக சேர ஆசைப்பட்டான், முருகேசன்.
ஞானியும், அவனை ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார்.
ஆசிரமத்தில் சீடர்களை அமர வைத்து போதனைகளை வழங்குவார், ஞானி. இடையில் சீடர்களிடம், கேள்விகளை கேட்பார். சிறந்த பதில் சொல்வோருக்கு, பரிசுகள் வழங்குவார்.
முருகேசனிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை, ஞானி.
ஒரு வாரமாக காத்திருந்தவனுக்கு, குழப்பமாக இருந்தது.
'அனைவரிடமும் ஏதாவது கேள்வி கேட்கும் ஞானி, என்னிடம் மட்டும் எதையும் கேட்கவில்லையே' என, மனம் குமுறினான்.
யாருக்குமே தெரியாத கேள்விகளுக்கு, பதில் தெரிந்தும், ஞானி, தன்னை கேட்காததால் அமைதியாக அமர்ந்திருந்தான்.
அ ன்றும் வழக்கம்போல கூட்டம் ஆரம்பித்தது.
ஒரு முடிவுடன் ஞானியின் கண்களில் படும்படி, முதல் வரிசையில் அமர்ந்திருந்தான், முருகேசன்.
'என்னை கேட்காவிட்டாலும், எழுந்து பதில் சொல்லி விட வேண்டும்' என, முடிவு செய்திருந்தான்.
அன்று வழக்கமான கருத்துரைகள் வழங்கிய பின், சீடர்களிடம் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார், ஞானி.
'ஞானத்தை அடைவது எப்படி...' எனக் கேட்டு, 'நீ சொல்...' என, முருகேசனுக்கு பின் அமர்ந்திருந்த சீடனை நோக்கி கையை நீட்டினார்.
அவன் எழுந்து, பதில் சொல்ல தெரியாமல் நின்றான்.
உடனே, 'நான் சொல்கிறேன்...' என, கையை உயர்த்தியபடி எழுந்தான், முருகேசன்.
'உன்னை கேட்கவில்லையே...' என்றார், ஞானி.
'உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து, ஏதாவது கற்றுக் கொள்ளலாம் என, நினைக்கிறேன். ஆனால், என்னை மட்டும் புறக்கணிக்கிறீர்களே... இது நியாயமா...' என குமுறினான், முருகேசன்.
சிரித்தபடி, 'உனக்கு கற்றுக் கொடுத்து கொண்டு தானே இருக்கிறேன்...' என்றார், ஞானி.
புரியாமல் திகைத்தான், முருகேசன்.
'இதுவரை உனக்கு கற்றுக் கொடுக்க முயன்றது, பொறுமை. ஆனால், நீ அதை சரியாக கற்றுக் கொள்ளவில்லை...' என்றார், ஞானி.
முருகேசன் முழித்தான்.
'எதையும் கற்றுக் கொள்வதற்கு, முதலில் பொறுமை அவசியம். உன்னை கேள்வி கேட்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே நீ இருந்தால், நான் சொன்ன அறிவுரைகள் எதுவும் உன் மூளையில் ஏறாது. தெரிந்ததை அமைதியாக ஏற்றுக் கொள்வதும், தெரியாததை சந்தர்ப்பம் வரும்போது கற்றுக் கொள்வதும் தான், உண்மையான ஞானம்...' என கூறி முடித்தார், ஞானி.
ஞானியின் அறிவுரை, முருகேசனுக்கு புத்தியில் பொதிந்தது.
குழந்தைகளே... பொறுமை இல்லாதவனால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது.
- என்.எஸ்.பார்த்தசாரதி
