
முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் விடுமுறையில் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்ற போது, குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து திரும்பினர். பள்ளி ஆசிரியை ஜான்வி உதவியுடன் அவர்களை மீட்கும் திட்டம் வகுத்து அந்த வினோத தீவுக்கு சென்றனர். அங்கு குட்டி மனுஷயின தலைவரை அறிமுகம் செய்தான் லியோ. அவர்களிடம் பிரச்னையை அறிய முயன்றனர் சிறுமியர். இனி -
''இ ன்னும் உங்கள் பிரச்னையை சொல்லவில்லையே...''
''இங்கே சுரங்கக்காரர்கள் என்று குழு ஒன்று இருக்கிறது...''
''அதில் எத்தனை பேர் இருப்பர்...''
''எத்தனை பேர் என்று சரியாக தெரியாது. ஆனால், இந்த தீவில் எப்போதும், ஐந்து பேர் இருப்பர். அவர்கள் எங்கள் இனப்பெண்களையும், குழந்தைகளையும் பணயமாக வைத்து, எங்களை சுரங்கத்தில் வேலை பார்க்க வைக்கின்றனர்...''
''சுரங்க வேலைக்கு ஊதியம்...''
''ரேஷன் முறையில் உணவுப் பொருட்கள் தருவர். எங்கள் குடிசைகளை சரி செய்து கொடுத்து விட்டு அதற்கு பதிலாக எங்களை கொத்தடிமைகளாக வைத்திருக்கின்றனர்...''
''சுரங்கத்தில் எவ்வளவு பேர் வேலை பார்க்கிறீர்கள்...''
''எல்லா ஆண்களும் தான்... எண்ணிக்கையில் சொல்ல வேண்டுமென்றால் மொத்தம், 32 பேர் வேலை பார்க்கிறோம்...''
''அங்கு என்ன வகையான ரத்தினம் கிடைக்கிறது...''
''பலவகையான ரத்தினங்கள் கிடைக்கின்றன. வெள்ளை, சிவப்பு, நீலம், பச்சை இன்னும் சில வண்ண ரத்தினங்கள் கிடைக்கின்றன...''
தலைவர் கூறியதும் ஆச்சரியப்பட்டாள் ரீனா.
''அது எப்படி சாத்தியம்... ஒரு சுரங்கத்தில் ஏதாவது ஒருவகை ரத்தினம் தானே கிடைக்கும்...''
''அதெல்லாம் எனக்கு தெரியாது. இந்த சுரங்கம், 600 அடி வரை ஆழமிருக்கும். அங்கே பல வண்ணத்தில் ரத்தினக் கற்கள் மண்ணோடு மண்ணாக கலந்திருக்கின்றன. அவற்றை நாங்கள் தோண்டி எடுத்து வர வேண்டும்...''
இவ்வாறு கூறிய பழங்குடியின தலைவர் கோயாவைக் குழப்பமாக பார்த்தாள் ரீனா.
''இப்படி எத்தனை சுரங்கங்களில் வேலை செய்கிறீர்கள்...''
''ஒரு சமயத்தில், ஒரு சுரங்கம் தான். ஏற்கனவே, ஒரு சுரங்கத்தில் நாங்கள் வேலை செய்து முடித்து விட்டோம். அதிலிருந்த ரத்தினங்களை அவர்களுக்கு எடுத்துக் கொடுத்து விட்டோம். இப்போது அங்கிருந்து கொஞ்சம் தொலைவில் இன்னொரு சுரங்கம் தோண்டி அதிலிருந்து ரத்தினங்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம்...''
''புது சுரங்கமா...''
''ஆமாம்... புது சுரங்கம் தான். இங்கேயும் பூமிக்கு அடியில் ரத்தினங்கள் இருக்கின்றன...''
''சுரங்கம் எப்படி தோண்டுவீர்...''
''இருநுாறு அடி வரை கடப்பாறை, மண்வெட்டி வைத்து தான் தோண்ட வேண்டும். அதன்பின், வெடி மருந்து பயன்படுத்தி தோண்டுவோம்...''
''வெடி மருந்தா...''
''ஆமாம்... எங்களுக்கு வெடி மருந்து கொடுப்பர். 200 அடிக்கு கீழே சிறு துளைகள் போட்டு அதில் வெடி மருந்து நிரப்பி மேலே வந்து விடுவோம். வெடி மருந்து வெடித்து, மண்ணும், ரத்தினங்களும் உதிரியாக சிதறிக் கிடக்கும். அதை எடுத்து மேலே கொண்டு வருவோம்...''
''அதற்கு அப்புறம்...''
''மேலே மரங்கள் அடர்ந்த பகுதியில் கூடாரம் உள்ளது. அங்கு, மண்ணையும், ரத்தினங்களையும் தனித்தனியாக பிரித்துக் கொடுப்போம்...''
தங்களது வேலையை பற்றி விவரித்தார் பழங்குடியின தலைவர் கோயா.
''இப்படி எத்தனை அடி ஆழம் தோண்டுவீர்...''
''ரத்தினங்கள் கிடைக்கும் வரை பூமிக்குள் தோண்டி போக வேண்டும். 500 - 600 அடி ஆழம் வரை தோண்டுவோம்...''
கவலை தோய்ந்த குரலில் கோயா தொடர்ந்தார்...
''இந்த சுரங்கத்தில் வேலைகள் முடிந்ததும், அடுத்து புது சுரங்கம் தோண்ட சொல்லி கொண்டிருக்கின்றனர்...''
ரீனாவும், மாலினியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
கோயா சொன்ன தகவல்களை கேட்டதும் இருவருக்கும் நிறைய குழப்பமான கேள்விகள் மனதில் எழுந்தன.
''நாங்கள் அந்த சுரங்கத்தை பார்க்க முடியுமா...''
''அங்கு எப்போதும் மூன்று பேர் காவலுக்கு இருப்பர். இரவில் வேண்டுமானால் முயற்சிக்கலாம்...''
''எங்களால் இரவில் வர இயலாது...''
''காவலிருப்போர் துப்பாக்கி, கத்தி எல்லாம் வைத்திருப்பர்...''
''அருகில் சென்று பார்க்க வேண்டியது இல்லை. பாதுகாப்பான துாரத்தில் இருந்து அவர்கள் கண்ணில் படாமல் மறைந்து சுரங்கத்தின் தோற்றத்தைப் பார்த்தால் போதும்...'' என்றாள் மாலினி.
''எப்போது பார்க்க வேண்டும்...''
''நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். இப்போது போக முடியுமா...''
ரீனா கேட்க, சற்று தயங்கினார் கோயா.
''சுரங்கத்தில் மூன்று பேர் காவலுக்கு இருப்பர். இருவர் இங்கு வந்து பார்த்துவிட்டு சென்றுவிடுவர்...''
அவர் சொல்ல ஆரம்பித்ததும் லியோ குறுக்கிட்டான்.
''அந்த இரண்டு பேரும் படகில் போய்விட்டனர். தீவில் வேற்று மனிதர்கள் யாரும் இல்லை...''
''அப்படியானால் இப்போதே போகலாம்...''
மரங்கள் இருந்த பகுதியிலே ஓரிடத்தில் கூடாரத்தை அமைத்தனர்.
சாப்பாட்டையும், தண்ணீரையும் எடுத்து கொண்டு கிளம்பினர்.
''சுரங்கம் இருக்கும் இடம் எவ்வளவு துாரம் இருக்கும்...''
''நடந்து போகும் துாரம் தான்... வாருங்கள் நான் அழைத்து செல்கிறேன்...'' என்ற கோயா, ''நீ மரத்தில் ஏறி யாராவது வருகின்றனரா என்பதை கண்காணித்து சொல்...'' என லியோவிடம் கூறினார்.
ஒற்றையடி பாதை வழியாக அவர்களை அழைத்து சென்றார் கோயா.
மரங்களில் ஏறி சுற்றுப்புறத்தை கண்காணித்தபடி கிளைகளில் தாவித்தாவி அவர்கள் பார்வைக்கு வந்தான் லியோ.
ஓரிடத்தில் அவர்களை நிறுத்தினார் கோயா.
''இன்னும் இரண்டு மரங்களை தாண்டி அந்த பக்கம் போனால் சுரங்கம் இருக்கிற பகுதி வந்து விடும்.
''சுரங்கத்தின் வாசலில் மூன்று பேர் இருப்பர். நீங்கள் பக்கத்தில் சென்று பார்க்க வேண்டாம் தானே...''
''அவசியம் இல்லை. சற்று தொலைவில் இருந்து பார்த்தாலே போதும்...''
ரீனாவையும், மாலினியையும் மரங்களின் மறைவிலே அழைத்து வந்த கோயா, சுரங்கம் அமைந்திருந்த பகுதியை சுட்டிக்காட்டினார்.
அந்த இடத்தைப் பார்த்த ரீனா பிரமிப்புடன் கேட்டாள்...
''இந்த இடமா...''
நம்ப முடியாமல் பார்த்தாள்.
அவள் கண்கள் வியப்பில் விரிந்தன.
- தொடரும்...
நரேஷ் அருண்குமார்