
முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு தீவில் குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து, அவர்களை மீட்க ஆசிரியை ஜான்வி உதவியுடன் திட்டமிட்டனர். சுரங்கம் அமைந்திருந்த பகுதிக்கு சென்று, பழங்குடியின குட்டி மனுஷங்களின் தலைவர்களிடம் பேசினர். சுரங்கக்காரர்களிடம் இருந்து அவர்களை விடுவிக்கும் திட்டங்களை, குட்டி மனுஷங்களில் ஒருவனான லியோவுடன் இணைந்து செயல்படுத்தினர். இனி -
சுரங்கத்திற்குள் குட்டி மனுஷங்கள் பதுங்கி இருப்பதாக கருதி, அவர்களை வெளியே கொண்டு வர புகையை செலுத்தினர், சுரங்கக்காரர்கள். ஆனால், சற்று தொலைவில், பூமிக்கு அடியில் இருந்து புகை வெளியே வந்தது.
''அங்கே பார்... பழைய சுரங்கம் அருகில் புகை வருகிறது...'' என்றான், சுரங்கக்காரர்களில் ஒருவனான எரிக்சன்.
அந்தத் திசை நோக்கி சுங்கக்காரர்கள் அனைவரும் ஓடினர். அங்கே, பழைய சுரங்கத்தின் வாசல் வழியாக, இவர்கள் செலுத்திய புகை வெளியேறிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவர்களுக்கு விஷயம் புரிந்தது.
''இந்தக் குரங்கு மனிதர்கள், அந்தச் சுரங்கத்திலிருந்து, பழைய சுரங்கத்திற்கு ஒரு ரகசிய பாதையை அமைத்திருக்கின்றனர்...''
வியப்புடன் கூறினான், சுர்ஜித்.
''அன்பு, நீ புதிய சுரங்கத்தின் வாசலை மூடியதும், அவர்கள் இந்த ரகசிய பாதையைப் பயன்படுத்தி, பழைய சுரங்கத்தின் வழியாக வெளியேறி தப்பிவிட்டனர்... ச்சே!''
வெறுப்புடன் தரையில் உதைத்தான், எரிக்சன்.
''இப்போது என்ன செய்வது... நொடிப்பொழுது தாமதித்தாலும் நாம் மாட்டிக் கொள்வோம்...''
அச்சத்துடன் கூறினான், அன்பரசன்.
சுரங்கக்காரர்கள் ஐந்து பேரும், தப்பியோட முடிவு செய்தனர். அவசரமாக, படகு இருந்த இடம் நோக்கி விரைந்தனர்.
வழியில் ஒரு புதர் மறைவில் ரீனாவும், மாலினியும் பதுங்கி இருப்பதை கண்ட சுர்ஜித், சட்டென தாவி ஓடி, அவர்களை பிடித்துக் கொண்டான். மாலினியிடம் இருந்த வாக்கி டாக்கியைப் பிடுங்கினான், அன்பரசன்.
''இந்த திருவிளையாடல்களுக்கு எல்லாம் காரணம் நீங்கள் தானா... வாக்கி டாக்கி உன்னிடம் இருக்கிறது... அப்படியானால் எங்கள் மொபைல் போன், லேப் டாப், டிஜிட்டல் ஒளிப்பதிவு கருவி எல்லாம் எங்கே...'' என்றான், அன்பரசன்.
''அதைப் பற்றி அப்புறம் யோசிக்கலாம்... இப்போது நாம் தப்புவது தான் முக்கியம். இந்த இருவரையும் பணயக்கைதியாக வைத்து, நாம் தப்பி விடலாம்...'' என்றான், ஆன்டனி.
''ப்ளீஸ், எங்களை விட்டுவிடுங்கள்... நாங்கள் யாரிடமும் எதுவும் சொல்ல மாட்டோம்...'' என்றாள், மாலினி.
மாலினி சொல்வதை காதில் கூட வாங்காமல், இருவரையும் இழுத்து சென்றனர், சுரங்கக்காரர்கள்.
அப்போது-, 'டமார்' என்று மிகப்பெரிய வெடி சத்தம் கேட்டது. சுரங்கக்காரர்களின் படகு நிறுத்தி இருந்த இடத்திலிருந்து கரும்புகையும், தீப்பிழம்பும் வானை நோக்கி எழுந்தன.
அதைப் பார்த்ததும், 'படகுக்கு என்ன ஆச்சு...' என்று பதறியபடி, கடற்கரையை நோக்கி ஓடினர் மதனும், சுர்ஜித்தும்.
படகு தீப்பிடித்து எரிவதைக் கண்டு, 'ஐயோ... நம்ம படகு தான் எரியுது...' என்று கதறினர்.
அதைப் பார்த்த மற்ற மூவரும், ரீனாவையும், மாலினியையும் விட்டுவிட்டு, படகை நோக்கி ஓடினர். அந்த வினாடியில் சுதாரித்துக் கொண்ட ரீனாவும், மாலினியும், அங்கிருந்து தப்பி, மரங்கள் அடர்ந்த பகுதியில் பதுங்கினர்.
வெடிச்சத்தத்தையும், தீப்பிழம்பையும் கண்டு, கடலில் சென்று கொண்டிருந்த படகோட்டிகள், அதை நோக்கி வந்தனர்.
குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டதால், கொச்சி கடற்படை விமான தளத்திலிருந்து அவசர கால மீட்பு விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வினோதத் தீவைச் சூழ்ந்தன.
ஒரு மணி நேரத்திற்குள், அன்பரசன் உள்ளிட்ட சுரங்கக்காரர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியை ஜான்வி, ரீனா, மாலினி மூவரும், லியோவைப் பாராட்டினர். பழங்குடி இன மக்கள் அவர்களைச் சூழ்ந்திருந்தனர்.
''சரியான நேரத்தில் சமயோசிதமாக படகைத் தகர்த்தாய், லியோ... உன் செயல் எங்களைக் காப்பாற்றியதோடு, இந்த, 'ஆப்பரேஷன் லியோ'வையும் வெற்றிகரமாக முடித்து வைத்தது...'' என்றாள், ஆசிரியை ஜான்வி.
''மாலினி, ரீனாவை அந்தக் கொடியவர்கள் பிடித்ததும், எனக்கு வந்த கோபத்தில் வெடிமருந்தை பயன்படுத்தி படகைத் தகர்த்து விட்டேன்...'' என்றான், லியோ.
'இனி, எங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காதே...'
கோயாவும், குட்டி மனுஷங்களின் மற்ற தலைவர்களும் ஆர்வமுடன் கேட்டனர்.
''நிச்சயமாக இருக்காது... அவர்கள் தோண்டியது, ரத்தினச் சுரங்கமே அல்ல. 2024, டிசம்பர் மாதம், ஆப்பிரிக்காவில் இருந்து வந்த ஒரு குட்டிக் கப்பல், சுனாமியில் மாட்டி, உங்கள் தீவில் புதைந்துவிட்டது. அதில் பல வகையான வைரங்களும், ரத்தினங்களும் இருந்தன...'' என்று, பின்னணி குறித்து சொல்ல ஆரம்பித்தாள், ஜான்வி...
''இதைத் தெரிந்து கொண்ட இந்தக் கும்பல், உங்களைப் பயன்படுத்தி ஆழ்துளை கிணறு போன்ற சிறிய சுரங்கங்களைத் தோண்டி, அந்தக் கப்பலில் இருந்த வைரங்களையும், ரத்தினங்களையும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, அரசின் சுங்கத்துறைக்குத் தெரியாமல் கடத்தியிருக்கிறது... ''
ஜான்வி விவரித்து கொண்டிருந்த போது, குறுக்கிட்டாள் மாலினி...
''இப்படி ஒரு சம்பவம் நடப்பது, அரசுக்கு ஏன் தெரியவில்லை...''
ஜான்வி தொடர்ந்தாள்...
''அவர்கள், இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் சிறு குழிகளாகத் தோண்டியுள்ளனர். கட்டடம் எழுப்பாமல், கூடாரங்களை அமைத்து, அவை செயற்கைக்கோள் கண்காணிப்பில் தெரியாதபடி மறைத்து விட்டனர். அவர்கள் இயந்திரங்களைப் பயன்படுத்தி இருந்தாலோ, வெளி ஆட்களைப் பயன்படுத்தி இருந்தாலோ, கண்டிப்பாக அரசுக்குத் தெரிந்திருக்கும்...'' என்றாள், ஜான்வி.
'உங்களுக்கு ரொம்ப நன்றி...' என்றனர் குட்டி மனுஷங்கள். மூவரை சுற்றியும் கும்மியடித்து, நடனமாடி, குலவையிட்டு நன்றி தெரிவித்தனர்.
''விரைவில் அரசாங்கம் உங்களுக்கு நல்ல குடியிருப்பு வசதியும், மின்சார வசதியும் செய்து கொடுக்கும்...'' என்று, கூடுதலாக நல்ல தகவலையும் தெரிவித்த ஜான்வி, அவர்களிடம் விடை பெற்றாள்.
'அவ்வப்போது வந்து எங்களைப் பார்த்து செல்லுங்கள்...' என்ற வேண்டுகோளுடன் லியோவும், தீவு மக்களும் அவர்களுக்கு விடை கொடுத்தனர்.
- முற்றும்.
நரேஷ் அருண்குமார்

