PUBLISHED ON : ஆக 01, 2026

சென்னை, கிண்டி, லயன்ஸ் கிளப் ஆப் லேபர் காலனி பள்ளியில், 1970ல், 4ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...
ஆங்கில ஆசிரியராக இருந்த நாசர் அன்று, 'ரியல் லவ் ஸ்டேஸ் இன் யுவர் ஆர்ட்' என்ற ஆங்கில பாட வரிகளை படித்தார். அதன் உண்மை அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல், ஏதோ கெட்ட வார்த்தை கேட்டது போல், சிரிப்பால் அதிர்ந்தது வகுப்பறை.
உடனே, 'லவ்' என்ற வார்த்தையை கரும்பலகையில் எழுதினார், ஆங்கில ஆசிரியர். தொடர்ந்து அதற்கு இணையான அன்பு, காதல், நேசம் என்ற சொற்களை குறிப்பிட்டார். வியப்புடன் கவனித்த எங்களிடம், 'அன்பு என்பது, எல்லா உயிரினங்களிடமும் காட்டுவது; காதல் என்பது, கணவன், மனைவியிடம் காட்டுவது; நேசம் என்பது, நீங்கள் நண்பர்களிடம் காட்டுவது...' என, விளக்கம் அளித்தார். எங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தோம்.
தற்போது எனக்கு, 65 வயதாகிறது. தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணி செய்து, ஓய்வு பெற்றேன். பக்தி இலக்கியமான தேவாரத்தில், 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி...' என்ற பாடலை கேட்கும் போதெல்லாம், ஆங்கில ஆசிரியர் நாசர் நினைவு மனதில் சுடர் விடுகிறது. அவரது தெளிந்த அறிவைப் போற்றுகிறேன்.
- ப.ராசேந்திரன், சென்னை.
தொடர்புக்கு: 80562 83561
