
மதுரை, சேதுபதி உயர்நிலைப் பள்ளியில், 1968ல், 9ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
கணித ஆசிரியராக இருந்தார் வி.ஜெ.கல்யாண சுந்தரம். பாட வேளையில் கண்டிப்பை கடைபிடித்து மற்ற நேரம் கலகலப்புடன் பழகுவார்.
ஒருநாள் பாடம் நடத்தி கொண்டிருந்த போது திடீரென மேகம் கறுத்து காற்று பலமாக வீசியது. வகுப்பை நடத்த அது இடையூறாக அமைந்தது. உடனே ஒரு மாணவனை அழைத்து, கதவை மூடுவதற்கு மாறாக, 'கதவைத் திற...' என கூறிவிட்டார். இதை கேட்டதும் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த மாணவர்கள் 'கொல்' என சிரித்தனர்.
அதை கண்டு சிறிதும் கோபமோ, எரிச்சலோ அடையாமல், 'அறையில் கதவு அரைப்பகுதி திறந்திருப்பதாக கருதினால், மீதிப் பகுதி முடியிருக்கிறது என்பது பொருள். அதே போல் கதவு முழுதும் மூடி இருந்தால், திறந்திருப்பதாக தான் பொருள் கொள்ள வேண்டும்...' என்றதுடன், 'ஹாப் ஷட், ஹாப் ஒபன்; புல் ஷட், புல் ஓபன்' என, கணித விதியை முன்வைத்து அழுத்தம் திருத்தத்துடன் விளக்கமளித்தார்.
கேலி செய்தோர் வெட்கத்துடன் தலைகுனிந்தனர். அவரது திறமையை பாராட்டும் வகையில் வகுப்பே எழுந்து நின்று கரவோசை எழுப்பியது.
தற்போது என் வயது 73. தமிழக சமூக நலத்துறையில் மாவட்ட அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். இதழ்களில் கணிதம் தொடர்பான செய்திகளை படிக்கும் போதெல்லாம் கணித ஆசிரியர் வி.ஜெ.கல்யாணசுந்தரம் முகம் மனத்திரையில் நிழலாடுகிறது. அவரை வணங்குகிறேன்.
- கு.கணேசன், மதுரை.
தொடர்புக்கு: 99526 82637

