
பட்டம் பறக்க விட்டு மகிழும் பழக்கத்தை, உலகிற்கு அறிமுகப்படுத்தியோர், சீனர்கள்.
ஒரு சீன விவசாயி, பறந்து விடாதிருக்க தன் தொப்பியில் ஒரு நுாலைக்கட்டியிருந்த போது, பலத்த காற்று அடித்ததில், முதல் பட்டம் பிறந்தது என்று, சீன புராணக்கதை சொல்கிறது.
சீனாவில், கி.பி., 468ல் வாழ்ந்த செல்வந்தர் ஒருவர், பறவைகள் மீது பற்று கொண்டிருந்தார். அவை பறப்பதை பார்த்து ரசிப்பார். லேசான மரத்தால், கழுகு பொம்மை செய்து பறக்க வைத்து மகிழ்ந்தார். இதனால் உற்சாகமடைந்து, இலைகளை கொண்டு பட்டம் செய்து பறக்க விட்டார். இதை பின்பற்றி, ஒட்டுமொத்த சீனாவிலும் பட்டம் பறக்க துவங்கியது.
ஆரம்பத்தில், பட்டுதுணியில் மூங்கில் குச்சிகளை வைத்து பட்டங்கள் செய்யப்பட்டன. கி.பி., 6ம் நுாற்றாண்டில், காகித பட்டங்கள் உருவாகின. சீனர்கள் பட்டங்களை வைத்து, துாரத்தை அளந்தனர். காற்றின் இயல்பை அறிந்தனர். தகவல்களை தெரிவித்தனர்.
ஆரம்பகால சீன பட்டங்கள், செவ்வக வடிவில் இருந்தன. பட்டத்தில் வளைந்த குச்சியைப் பயன்படுத்த ஆரம்பித்த பின், வால் இல்லாத பட்டங்கள் உருவாகின.
உலகின் மற்ற பகுதிகளில் பட்டம் விடும் வழக்கம், அர்ச்சி டாஸ் என்ற கிரேக்கர் மூலம் கி.மு., 4ம் நுாற்றாண்டில் துவங்கப்பட்டது.
ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில், 1749ல், அலெக்சாண்டர் வில்சன் என்பவரும், தாமஸ் மெல்பக்லி என்பவரும் தெர்மாமீட்டரை பட்டத்தில் கட்டி பறக்க விட்டு, விண்வெளியில் வெப்பநிலை எவ்வாறு உள்ளது என கண்டறிந்தனர்.
மின்னலையும், இடியையும் ஆராய்வதற்கு அமெரிக்க விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்க்ளின், பட்டங்களை பயன்படுத்தினார். பிரபல அமெரிக்க விஞ்ஞானிகளான, அலெக்சாண்டர் கிரஹாம் பெல், ரைட் சகோதரர்கள் போன்றோரும் பட்டங்களை வைத்து பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். விமானத்தை கண்டுபிடிப்பதற்கு, ஒரு காரணியாக பட்டம் இருந்திருக்கிறது.
கடந்த, 1894ல் பறக்கவிடப்பட்ட, 36 அடி நீளமுள்ள பட்டம், ஒரு மனிதனை, 100 அடி உயரத்திற்கு துாக்கி சென்றுள்ளது.
ஜப்பான் நாட்டில், 200 மீட்டர் அகலம், 2,550 கிலோ எடையில் பறக்க விடப்பட்டது தான், உலகிலேயே மிகப்பெரிய பட்டம். கடற்கரையில் இதை பறக்க விட, 100 பேர் தேவைப்பட்டனர்.
நியூசிலாந்தை சேர்ந்த பீட்டர் லின் என்பவர், 10,400 சதுர அடி கொண்ட மிகப்பெரிய பட்டத்தை உருவாக்கி, கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார்.
இந்தியாவில், அலெக்சாண்டரின் படைவீரர்கள், பட்டம் விடும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர்கள். குஜராத் மாநிலம், ஆமதாபாதில், பட்டங்களுக்கென்றே சிறப்பு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. பானுஷா என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட, விதவிதமான வடிவங்களில் பட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இது உலகின் இரண்டாவது பெரிய பட்டங்களை கொண்ட அருங்காட்சியம். பட்டங்களுக்கென்றே மிகப்பெரிய அருங்காட்சியம் ஜப்பான் நாட்டில் உள்ளது.
இந்தியாவில், ஜன., 14ல், மகரசங்கராந்தி தினத்தில், குஜராத்தில் நடக்கும் பட்டம் விடும் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த நாளில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கும். அதேபோல, மேற்குவங்க மாநிலத்தில், செப்டம்பர் மாதம் கொண்டாடப்படும் விஸ்வகர்மா பூஜை சமயத்தில், பட்டம் விடும் திருவிழா நடைபெறுகிறது.
- கோவீ.ராஜேந்திரன்

