
ராமநாதபுரம், செய்யது அம்மாள் பள்ளியில், 1979ல், 4ம் வகுப்பு படித்தேன். என் தந்தை, 'தினமலர்' நாளிதழ் வாசிக்கும் வழக்கம் உடையவர். இப்போதும், எங்கள் வீட்டில் தினமலர் வாங்குகிறோம்.
எங்கள் தமிழாசிரியையாக இருந்தவர், பாத்திமா. பாடத்துடன், வாழ்க்கை கல்வியும் கற்றுத் தந்தார், அவர். 'அனைவரும் நாளிதழ், புத்தகங்கள் வாசிக்க வேண்டும். தொடர்ந்து வாசிப்பதால், தமிழை பிழையின்றி எழுத முடியும். நாளிதழில் வாசித்தவற்றை, மாணவர்கள் தினமும் வகுப்பறையில் கூற வேண்டும்...' என்றார், தமிழாசிரியை.
மறுநாளே, காலையில் எழுந்து, தினமலர் வாசித்தேன். தமிழ் வகுப்பில், நாளிதழில் வாசித்ததை தமிழாசிரியை முன்னிலையில் கூறி, அவரின் பாராட்டை பெற்றேன். அவர் கொடுத்த ஊக்கத்தால், பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில் பரிசுகளை வென்றேன். அப்பாவும், என் வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், வார, மாத இதழ்களை வீட்டிற்கு வரவழைத்தார்.
பின், மதுரை, பாத்திமா கல்லுாரியில், இயற்பியல் படித்தேன். அப்போது நான் எழுதிய துணுக்குகள், கட்டுரைகள், தினமலர் நாளிதழ் மற்றும் இணைப்பு புத்தகங்களில் பிரசுரமானதோடு, பரிசும் கிடைத்தது.
தற்போது, என் வயது, 55. அலங்காநல்லுார், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இயற்பியல் முதுகலை ஆசிரியராக பணிபுரிகிறேன். படித்தது இயற்பியல் என்றாலும், எனக்கு தமிழ் மேல் அலாதி ஆர்வம். எனக்கு, 2018ல், 'தினமலர்- லட்சிய ஆசிரியர் விருது' கிடைத்தது. தற்போது, சிறுகதைகளும் எழுதுகிறேன். வாசிப்பதும், எழுதுவதுமே என்னை லட்சிய ஆசிரியராக்கியது. இத்தருணத்தில் தமிழாசிரியை பாத்திமாவை, மனதார வணங்குகிறேன்.
- எஸ்.கவுரி மீனாட்சி, மதுரை. தொடர்புக்கு: 94880 12454

