PUBLISHED ON : ஆக 15, 2026

துாத்துக்குடி, செயின்ட் சேவியர்ஸ் பள்ளியில், 1972ல், 9ம் வகுப்பில் சேர்ந்தேன். தமிழாசிரியராக இருந்த சுடலைமுத்து, மொழி மீது பற்று ஏற்படும் வகையில் பாடங்களை ரசனையுடன் நடத்துவார். மிகவும் நகைச்சுவை பொங்க, 'விளக்குமாறால் விளக்கினால் விளங்கும்...' என்று வகுப்பில் அடிக்கடி கூறுவார். அதாவது, சரியான முறையில் பாடத்தை விளக்கினால் புரியும் என்பது தான், அதன் பொருள்.
அவரது அடுக்கு மொழித் திறன் வியக்க வைத்தது. அதுவே, என்னை கவிதை எழுதவும் துாண்டியது. பள்ளி ஆண்டு விழா மேடையில், மூன்று எழுத்துகளை முக்கியப்படுத்தும் வகையில் கவிதை எழுதி வாசித்து, பாராட்டு பெற்றேன்.
அந்த ஆண்டு பள்ளி இறுதித் தேர்வு முடிவு, தபாலில் வந்தது. அதில், 'வெற்றி என்ற மூன்றெழுத்து, உனக்கு கிடைத்துள்ளது...' என, குறிப்பிடப்பட்டு இருந்தது. நான் வாசித்த கவிதையை மனதில் கொண்டே அவ்வாறு குறிப்பிட்டிருந்ததை அறிந்து மகிழ்ந்தேன்.
என் வயது, 68; இந்திய விண்வெளி ஆய்வுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். எழுதுவதில் ஆர்வம் கொண்டு, இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளேன். இதற்கு துாண்டுதலாக இருந்த, தமிழாசிரியர் சுடலைமுத்துவை போற்றுகிறேன்.
- கோ.ஈஸ்வரமூர்த்தி, திருநெல்வேலி.
தொடர்புக்கு: 94861 50220
