PUBLISHED ON : ஆக 01, 2026

திருப்பத்துார், துாய நெஞ்சக்கல்லுாரியில், சமூகப்பணி பாடத்தில் 1988ல், முதுகலை படித்தேன். விவசாய குடும்பத்தை சேர்ந்த நான் வசித்த கிராமத்தில் இருந்து, 36 கி.மீ., துாரத்தில் இருந்தது, கல்லுாரி.
மிதிவண்டியில், 4 கி.மீ., துாரத்தில் உள்ள நெடுஞ்சாலையை அடைந்து, பின் சலுகை கட்டணத்தில் பேருந்தில் சென்று வருவேன்.
வகுப்பில் பல மாநில மாணவர்களின், நடை, உடை, பாவனை மற்றும் ஆங்கில உரையாடல் கண்டு, மிரட்சி அடைந்திருந்தேன். எளிமையாக பழகும் இயல்புடைய பேராசிரியர் ஏ.ஜெ.கிறிஸ்டோபர், அவ்வப்போது தமிழிலும் பேசியது, சற்று ஆசுவாசம் தந்தது.
அன்று என் தந்தையுடன் சென்று, 'கிராமவாசியான என்னால் படிப்பை தொடர முடியுமா...' என பேராசிரியரைக் கேட்டேன். சந்தேகத்தை போக்கும் விதமாக, 'நானும், கிராமத்தை சேர்ந்தவன் தான். முயன்று படித்து தான், இந்த பணிக்கு வந்துள்ளேன்...' என, நம்பிக்கை ஊட்டினார். அன்று முதல், கூடுதல் கவனம் செலுத்தி, ஆங்கில உரையாடல் உட்பட, தொடர்பியல் திறனை வளர்க்க பயிற்சி தந்தார், பேராசிரியர். மனம் ஊன்றி கற்று, தங்கபதக்கம் பெற்று சாதித்தேன். பழங்குடியினர் வளர்ச்சி குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றேன்.
என் வயது, 59. தென் மாநிலங்களில் பழங்குடியின மக்கள் மேம்பாட்டுக்காக, பணிகள் செய்து வருகிறேன். அதற்காக தேசிய அளவில் விருதுகளும் பெற்றுள்ளேன். செங்கல்பட்டு அருகே, இருளர் பழங்குடி பெண்கள் பொருளாதார வளர்ச்சிக்காக, செயல்படுத்தியிருந்த என் திட்டத்தை மாணவர்களுடன் பார்வையிட்ட பேராசிரியர் ஏ.ஜெ.கிறிஸ்டோபர், 'சிறந்த முன்மாதிரியாக இருக்கிறது...' என பாராட்டியது, மகிழ்ச்சி தந்தது. வாழ்வில் உயர நல்வழிகாட்டியவரை போற்றுகிறேன்.
- கே.கிருஷ்ணன், திருப்பத்துார்.
தொடர்புக்கு: 81441 70046
