PUBLISHED ON : ஆக 08, 2026

கோவை, சேரிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2010ல், பிளஸ் 2 படித்தேன். வகுப்பாசிரியை அம்சவேணி, கணக்குப்பதிவியல் பாடமும் கற்பித்தார். வகுப்பறையில் அவரது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு பாடம் முடித்த பின், சிறிய தேர்வுகள் நடத்துவார். கேள்விகளை கூறியதும், முதல் ஆளாக எழுதி காண்பிப்பேன்.
காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால், ஆங்கில அகராதி பரிசாக கொடுத்தார். அது, மொழித்திறனை வளர்க்க உதவியது. பொதுத்தேர்வுக்காக ஆசி பெற்றபோது, 'நீ முதல் மதிப்பெண் பெற வேண்டும்...' என, வாழ்த்தினார், வகுப்பாசிரியை. நன்றாக படிக்கும் பலர் இருந்தும், அவ்வாறு கூறியது, என்னை வியப்பில் ஆழ்த்தியது.
பொது தேர்வில் பள்ளி அளவில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். கணக்குப்பதிவியலில், 200 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தேன். தமிழக காவல்துறை முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டியிடம், சிறப்பு பரிசுகள் வாங்கி கவுரவம் பெற்றேன்.
எனக்கு, 34 வயதாகிறது. தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கற்பித்தலில் புதுமைகள் செய்து வருகிறேன். அதற்காக விருதுகளும் பெற்றுள்ளேன். இதுபோன்ற அங்கீகாரங்களுக்கு அடிப்படையாக, பள்ளியிலே ஊக்குவித்த வகுப்பாசிரியை அம்சவேணியை போற்றுகிறேன்.
- பொ.மோகன்ராஜ், கோவை.
தொடர்புக்கு: 90957 90980
