PUBLISHED ON : மே 23, 2026

முன்கதை: ஊர் ஊராக செல்லும் நாடோடிக்கு, 'அழைக்கும் போதெல்லாம், ஒரு தேவதை தோன்றி உதவி செய்யும்' என்ற, வரம் கிடைத்தது. அணிந்தால் மறைய வைக்கும் ஒரு மாய மோதிரமும் கிடைத்தது. ஒரு புதிய நகருக்கு சென்ற நாடோடிக்கு, பொதி கழுதை போல சுமை துாக்கி வந்த பணியாளரின் வேதனை, கோபத்தை ஏற்படுத்தியது. இனி -
பொதி சுமந்து வந்த பணியாளர், கொத்தடிமையாக வேலை பார்த்து வந்ததை அறிந்து, வேதனைப் பட்டான், நாடோடி. பணியாளர்களை இழிவாக நடத்தும் முதலாளி கருமி கண்ணாயிரம் மீது கோபமடைந்தான்.
'நியாய, அநியாயம் எல்லாம் பார்த்தா, இங்கே உயிர் வாழ முடியாதுங்க... சரி, எனக்கு நிறைய வேலை இருக்கு... அரைமணி நேரத்திலே துணியை துவைச்சி, கொண்டு போகணும்... இல்லைன்னா பிரம்படி கிடைக்கும்...' என்றபடி, வேலையை துவக்கினார், பணியாளர்.
அவரைப் பார்த்து பரிதாபப்பட்டான், நாடோடி.
'இந் த அடிமைத்தனத்திற்கு முடிவு கட்ட வேண்டும்...' என எண்ணியபடி நடந்தான். அருகில் இருந்த மண்டபத்தை பார்த்து, அதற்குள் சென்றான், நாடோடி.
கருமி கண்ணாயிரம் குறித்தும், அவனிடம் கஷ்டப்படும் பணியாளர்கள் கு றித்தும் யாரிடமாவது பேச வேண்டும் என்று, நாடோடிக்கு தோன்றியது.
தேவதையை அழைத்தான். அவன் முன், தேவதை தோன்றியது.
வேலை ஆட்களை அடிமை போல நடத்தும் கண்ணாயிரம் குறித்து, தேவதையிடம் பகிர்ந்தான். நாடோடியின் கவலையை, தேவதையும் உணர்ந்தது.
'எல்லாவற்றுக்கும் உணவே அடிப்படை; அதை வைத்தே விளையாடலாம்...' என்று, நாடோடிக்கு யோசனை கூறியது, தேவதை.
'எப்படி...' என்றான், நாடோடி.
'வேலையாட்களுக்கு அளிக்கும் பழைய சோறு, அறுசுவை உணவாக மாறும்; அதே போல, கண்ணாயிரம் சாப்பிடும் ருசியான உணவு, சக்கையாக மாறும்...' என்று கூறி, கண் சிமிட்டியது, தேவதை.
நாடோடியின் முகத்தில் பிரகாசம் ஏற்பட்டது. 'அப்படியே செய்து விடுவோம்...' என்றான், நாடோடி.
அன்று மதியம், கருமி கண்ணாயிரம் சாப்பிட அமர்ந்தார்.
அவர் தட்டில் பல விதமான உணவுகளை பரிமாறினாள், மனைவி. பார்த்ததுமே நாவில் எச்சில் ஊறியது. ஆசை ஆசையாய் சாப்பிடத் தொடங்கினார்.
ஆனால், எந்த உணவின் ருசியையும், அவரது நாக்கு உணரவில்லை; புண்ணாக்கு சாப்பிட்டது போல இருந்தது. சாப்பிட முடியாமல், கை கழுவினார்.
அதே நேரம், வீட்டு பணியாளர்களுக்கு வழக்கம் ஸ்ரீபோல பழைய சோறு வழங்கப்பட்டது. அவர்கள் சாப்பிட்ட போது, ஒவ்வொரு கவளமும் அபார சுவையுடன் இருந்தது. ருசித்து சாப்பிட்டனர். வயிறு வேகமாக நிரம்பியது.
அடுத்த இரண்டு நாட்களும், இதே நிலை தொடர்ந்தது. சாப்பிட முடியாமல், கண்ணாயிரமும் அவரது மனைவியும் தளர்ந்து போயினர். பணியாளர்கள் ருசியாக, வயிறு நிறைய உண்பதால், மகிழ்ச்சியுடன் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்த்தனர்.
இதை கண்காணித்தபடி இருந்தான், நாடோடி.
ஒ ரு நாள், துறவியை போல உருவத்தை மாற்றி, கண்ணாயிரம் வீட்டிற்கு சென்றான், நாடோடி.
துறவியை கண்டதும், கை கூப்பி வரவேற்றார், கண்ணாயிரம். துறவி வேடத்தில் இருந்த நாடோடியிடம், தன் சோகக்கதையை சொல்லி வேதனைப்பட்டார்.
'ஒரு மனிதனுக்கு உணவு தானே முக்கியம். சுவை தெரியாமல் எங்களால் சாப்பிட முடியவில்லை...' என்று, கண்ணாயிரத்தின் மனைவியும் கவலையுடன் கூறினார்.
'மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி தானே சுவை தெரியும். உங்கள் இருவருக்கும் அறுசுவை உணவும், உழைத்து களைக்கும் பணியாளர்களுக்கு பழைய சோறும் போட்டதன் விளைவை இப்போது அனுபவிக்கிறீர்கள்....' என்றான், துறவி உருவத்தில் இருந்த, நாடோடி.
தவறை உணர்ந்தார் கண்ணாயிரம்.
-தொடரும்.
ஆர்.வி. பதி
