PUBLISHED ON : மே 30, 2026

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில், 1987ல், 12ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
எங்கள் கிராமத்திலிருந்து, 3 கி.மீ., துாரத்தில் இருந்தது, பள்ளி. பேருந்தில் செல்ல இயலாத வறுமையான குடும்ப சூழ்நிலை. ஒரு பழைய சைக்கிளை அப்பா வாங்கி தர, அதில் சென்று வந்தேன். எங்கள் ஊரை சேர்ந்த வகுப்பு நண்பன், ஒரு மாற்றுத்திறனாளி. அவனையும் சைக்கிளில் உடன் அழைத்து செல்வது வழக்கம்.
எங்கள் குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில், சைக்கிள் முழுதும் எரிந்து போனது. மறுநாள், அந்த மன வேதனையுடன் நண்பனுடன் பஸ்சில் பள்ளிக்கு சென்றேன். தகவல் அறிந்து என்னை அழைத்து, ஒரு புதிய சைக்கிளை வழங்கினார், கணக்கு ஆசிரியர் லாரன்ஸ்.
'ஒரு நல்ல செயல், இன்னொரு நற்செயலை துாண்டி விடும். மாற்று திறனாளியான உன் நண்பனுக்கு நீ உதவி செய்தாய்; அதேபோல, இப்போது உனக்கு செய்திருக்கிறேன். ஒவ்வொருவரும் வாய்ப்பு கிடைக்கும் போது சக மனிதருக்கு உதவி செய்ய வேண்டும்...' என்றார். அந்த நிகழ்வும், அறிவுரையும் என் மனதில் ஆழமாக பதிந்தது.
தற்போது, என் வயது, 55. சமூக சேவை பணிகள் செய்து வருகிறேன். பள்ளிப் பருவத்தில் ஆசிரியர் லாரன்ஸ் கூறிய அறிவுரையையும் கடைப்பிடித்து, இயன்ற உதவிகளை செய்து வருகிறேன்.
- வ.முருகன், விழுப்புரம்.
தொடர்புக்கு: 97156 40263
