
மதுரை மாவட்டம், மேலுார் ஸ்ரீசுந்தரேஸ்வரா வித்யாசாலா பள்ளியில், 1961ல், 4ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...
கணித ஆசிரியராக இருந்தார் தேவநாராயணன். அவரது மனைவி சாவித்திரி தமிழ் பாடம் நடத்தினார். இவர்கள் குடும்பத்துடன் என் வீட்டிற்கு அருகில் குடியிருந்தனர்.
அன்று பள்ளிக்கு, 10 நிமிடம் தாமதமாக செல்ல நேர்ந்தது. அப்போது பிரார்த்தனை கூட்டம் துவங்கியிருந்தது. தாமதமாக வந்தோரை தடுத்து நிறுத்தி ஒவ்வொருவரும், 100 உக்கி என்ற தோப்புக்காரணம் போடும் தண்டனை தந்திருந்தார் கணித ஆசிரியர். உத்தரவை மதித்து உக்கி போட்டுக் கொண்டிருந்தேன். மற்றவர்கள் மதிக்காமல் வகுப்புக்கு சென்று விட்டனர்.
தோப்புக்கரணம் அதிகம் போட்டதால் கால் வலி, அசதி, சோர்வால் அன்று முழுதும் அவதிப்பட்டு மாலை வீடு போய் சேர்ந்தேன். நடக்கவும், உட்காரவும் இயலாமல் சிரமப்பட்டேன். அந்த வேதனையிலும் நேரந்தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதி மனதில் ஆழமாகப் பதிந்தது.
என் வயது 71. அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றேன். பணிக் காலத்தில் மட்டுமல்ல, நேரந்தவறாமையை வாழ்வில் முழுமையாக கடைபிடித்து வருகிறேன். என் பிள்ளைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் நேரத்தின் அருமையை எடுத்துக் கூறி வருகிறேன். இதற்கு வித்திட்ட கணித ஆசிரியர் தேவநாராயணன் பாதத்தில் என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
- ப.விஜயலட்சுமி, சென்னை.
தொடர்புக்கு: 94458 80846

