PUBLISHED ON : ஜூலை 25, 2026

ஈரோடு மாவட்டம், பவானி, ஆண்கள் உயர்நிலை பள்ளியில், 1965ல், 8ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியராக இருந்த ஜீவமணி, 'ஆங்கில மொழியில் வாக்கியம் எழுதும் போது, 'கமா' மற்றும், 'புல் ஸ்டாப்' போன்ற நிறுத்தற் குறிகளை, சரியான பகுதிகளில் இட வேண்டும்; தவறாக பயன்படுத்தினால், பொருள் மாறி-விடும்; கவனமாக செயல்படவும்...' என அறிவுறுத்தி, மனதில் பதியும் வகையில் ஒரு கதையை கூறினார்.
கதையில், 'வழக்கில் ஒருவரை, நிரபராதி என, முடிவு செய்த நீதிமன்றம், 'கில் ஹிம் நாட், லீவ் ஹிம்' என, தீர்ப்பு எழுதியது. அந்த தீர்ப்பு நகலை தட்டச்சு செய்தவர், 'கில் ஹிம், நாட் லீவ் ஹிம்' என, நிறுத்தற்குறியை தவறாக இட்டு அனுப்பி விட்டார்...
'அதை படித்த சிறை அதிகாரி, கைதிக்கு தண்டனையை நிறைவேற்றி விட்டார். சிறிய நிறுத்தற் குறியை தவறாக இட்டதால், நிரபராதியின் உயிரை பறித்து விட்டது. எனவே கவனமுடன் செயல்பட வேண்டும்...' என எடுத்துரைத்தார், வகுப்பாசிரியர்.
தற்போது, என் வயது, 75. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். என்னை சந்திக்க வரும் மாணவ, மாணவியரிடம், நிறுத்தற் குறிகளை சரியாக பயன்படுத்த வலியுறுத்தி வருகிறேன். அதை கற்பித்த ஆசிரியர் ஜீவமணியை மனதில் கொண்டுள்ளேன்.
- கே.சீ.உமாசங்கர், கோவை.
தொடர்புக்கு: 99523 37828
