
சென்னை, பென்டிங் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1978ல், 10ம் வகுப்பு படித்தேன். எங்களின் வகுப்பு ஆசிரியையாகவும், ஆங்கில ஆசிரியையாகவும் இருந்தவர், மாலினி.
ஒரு நாள் அவர் வகுப்புக்கு வர, 10 நிமிடம் இருந்தது. நான், கரும்பலகை முன் நின்று, ஆசிரியை பாடம் நடத்துவதை போல எழுதி, நடித்துக் கொண்டிருந்தேன்.
வாசலில் ஆசிரியை வந்ததை கவனிக்கவில்லை. வகுப்பு மாணவர்களின் முணுமுணுப்பை கேட்டு, சுதாரித்தேன். ஆசிரியையிடம் மன்னிப்பு கோரி, இருக்கைக்கு திரும்பினேன். 'நன்றாக பாடம் நடத்துகிறாய். மதிய உணவு இடைவேளையின் போது, என்னை வந்து பார்...' எனக் கூறினார்,
வகுப்பாசிரியை. உணவு இடைவேளையின் போது, அவரை சந்தித்தேன். அப்போது, 'உனக்கு கற்பிக்கும் திறன் உள்ளது. மற்றவர்களுக்கு புரியும்படி விளக்குகிறாய். ஆனால், மற்ற ஆசிரியர்களை போல நடித்து, பாடம் நடத்தக் கூடாது. அது, அவர்களை பரிகாசம் செய்வது போல் ஆகிவிடும். உனக்கென தனி பாணி வகுத்து, சொல்லி கொடுப்பது சிறப்பை தரும்...' என, அறிவுரை கூறினார். நான் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டு, வகுப்பறைக்கு திரும்பினேன்.
'இனி யாரை போல நடித்தும், அவர்களை கேலி செய்வதில்லை' என, தீர்மானம் எடுத்து கொண்டேன். அதை கடைப்பிடித்தும் வருகிறேன்.
தற்போது என் வயது, 61. இல்லத்தரசியாக உள்ளேன். என் பேரக் குழந்தைகளுக்கு ஆன்மிக கதைகள், சிறுகதைகள், நீதி நுால் கதைகளை, எனக்கென தனி பாணி வகுத்து சொல்லி கொடுத்து, மகிழ்கிறேன்.
பள்ளி வகுப்பில் அனைவரின் முன்னிலையில் திட்டாமல், தனியாக அழைத்து அறிவுரை கூறி என்னை திருத்தி, வழி நடத்திய ஆசிரியை மாலினி, என் நினைவில் பசுமையாக வாழ்கிறார். அவருக்கு, என் நன்றியையும், வணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன்.
- கே.ஜே.நிர்மலா, மதுரை. தொடர்புக்கு: 97896 99218

