
உலகில் சுற்றுச்சூழல், ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது, பிளாஸ்டிக். நிலம், நீரை மாசுபடுத்தி, உடலில் புகுந்து நோய்களை உருவாக்குகிறது. இந்த அபாயத்தை புரிந்து, உடனடியாக செயல்பட வேண்டியது அவசியம்.
ஒவ்வொரு ஆண்டும் உலகில் பல ஆயிரம் கோடி கிலோ பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கனவே பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் குப்பையாக வீசப்படுகிறது. மைக்ரோ பிளாஸ்டிக் என்ற சிறு துகள்கள் எங்கும் பரவி ஆபத்தை விளைவிக்கிறது. இந்த துகள் கடற்கரை, கடல் நீரில் பரவுகிறது. இதனால் கடல் உயிரினங்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. கடல் சூழலும் கடுமையாக மாசடைகிறது.
நெசவுத் தொழிலில் பாலியஸ்டர், அக்ரிலிக், நைலான் பயன்பாடு, 60 சதவிகித ஆடைகளில் உள்ளன. இது, துவைக்கும் போது மைக்ரோ பிளாஸ்டிக் துகளாக மாறி கேடு விளைவிக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபை, 2020ல் வெளியிட்ட அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதை குறைக்க ஆடை அணியும் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதும், மறுசுழற்சியை ஊக்குவிப்பதும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஒவ்வொருவரும் அன்றாட செயலில் சிறு மாற்றங்களை செய்தால், சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். அதன் வழியாக ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
- வ.முருகன்