sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

பொங்கலோ... பொங்கல்!

/

பொங்கலோ... பொங்கல்!

பொங்கலோ... பொங்கல்!

பொங்கலோ... பொங்கல்!


PUBLISHED ON : ஜன 10, 2026

Google News

PUBLISHED ON : ஜன 10, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜன., 14,- பொங்கல் பண்டிகை

தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று, பொங்கல். இதன் தொன்மையான வரலாறு, சங்க காலம் வரை செல்கிறது.

சூரியனின் உத்தராயண பயணத்தையும், விவசாயத்தின் அறுவடையையும் கொண்டாடும் இப்பண்டிகை, இயற்கையுடனான தமிழர்களின் ஆழமான தொடர்பை வெளிப்படுத்துகிறது.

சங்க இலக்கியங்களில், தை மாதத்தில் நடைபெறும் விழாக்கள் குறித்த குறிப்புகள் உள்ளன. இவை, பொங்கல் பண்டிகையின் ஆரம்ப வடிவமாக இருக்கலாம்.

பொங்கல் என்ற சொல், 'பொங்கு' எனும் தமிழ் வினையிலிருந்து பிறந்தது. இது உணவு கொதிப்பதையும், மகிழ்ச்சியின் உச்சத்தையும் குறிக்கிறது.

பழந்தமிழர் காலத்தில், அறுவடை முடிந்து சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில், இவ்விழா துவங்கியது.

பொங்கலின் முதல் நாளாக, போகி கொண்டாடப்படுகிறது. இது, பழையவற்றை அகற்றி, புதியவற்றை வரவேற்கும் நாள். பழைய பொருட்களை எரித்து, வீடுகளை சுத்தம் செய்து, புது உற்சாகத்துடன் துவங்குவர்.

சில பகுதிகளில், இந்நாளில் இந்திரனுக்கு நன்றி செலுத்தப்படுகிறது. அப்பகுதிகளில், மழையளிக்கும் கடவுளாக அவர் போற்றப்படுகிறார்.

அடுத்து வரும் தைப் பொங்கல், சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள். புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல்லை பயன்படுத்தி, பால் பொங்கி, பொங்கல் படைக்கப்படுகிறது. இது, குடும்ப ஒற்றுமையையும், இயற்கைக்கு நன்றி செலுத்துவதையும் குறிக்கிறது.

மாட்டுப் பொங்கல், விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாளாகும். காணும் பொங்கல், உறவினர்களை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் நாளாக கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில், பெரும் உற்சாகத்துடன் பொங்கல் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் மண் பாண்டங்களில் பொங்கல் வைத்து, வாழை இலை விரித்து, உணவு பரிமாறப்படுகிறது.

புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில், பொங்கலை உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

மலேஷியாவில், தமிழர்களின் பொங்கல் விழாவிற்காக, பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு, பொங்கல் பானைகள் அலங்கரிக்கப்பட்டு, பாரம்பரிய உடைகளில் மக்கள் கூடி, விழா நடத்துவர்.

இலங்கையில், தமிழர்கள், தங்கள் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில், பொங்கலை விமரிசையாக கொண்டாடுவர்.

அமெரிக்காவில், தமிழ் சங்கங்கள் பொங்கல் விழாக்களை நடத்தி, இளைய தலைமுறையினருக்கு கலாசாரத்தை அறிமுகப்படுத்துகின்றன.

இந்தியாவின் பிற பகுதிகளில், பொங்கல் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் 'மகர சங்கராந்தி' என்றும், குஜராத்தில் 'உத்தராயண்' என்றும், ஆந்திராவில் 'பெடு சங்கராந்தி' என்றும், பலவாறு அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு பகுதியிலும், உள்ளூர் பழக்கவழக்கங்களுடன் இவ்விழா கொண்டாடப்படுகிறது. உதாரணமாக, பஞ்சாபில், 'லோக்ரி' என்ற பெயரில், மாலை நேரத்தில், நெருப்பு மூட்டி, பாடல்கள் பாடி மகிழ்கின்றனர்.

இவ்வாறு, பொங்கல் பண்டிகை, இந்தியாவின் பன்முகத் தன்மையையும், உலகெங்கும் தமிழர்களின் கலாசாரத்தையும், ஒற்றுமையையும் பறைசாற்றுகிறது.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்

-வ.முருகன்






      Dinamalar
      Follow us