
கோவை மாவட்டம், கரவழி மாதப்பூர் கிராமத்தில், அருள்மிகு வாழைத்தோட்ட அய்யன் கோவில் அரசு மேல்நிலை பள்ளியில், 1990ல், 8ம் வகுப்பு படித்தேன்.
எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது கூட, படம் வரைந்தபடி இருப்பேன். என் ஓவிய ஆர்வத்தை பார்த்த வகுப்பு ஆசிரியை ஜெயக்கொடி, அந்தாண்டு நடைபெற்ற கலை இலக்கிய விழா ஓவியப் போட்டியில், என்னை சேர்த்து விட்டார்.
ஆனால், என் குடும்ப சூழல் காரணமாக, ஆர்வமின்றி பங்கேற்றதால், போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஆசிரியை, என்னை திட்டிவிட்டார்.
அடுத்தாண்டு ஓவிய போட்டியில், எப்படியும் முதல் பரிசு வாங்கி, ஆசிரியைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என, நினைத்துக் கொண்டேன். அதன்படி, அடுத்தாண்டு போட்டியில், நான் வரைந்த இரட்டை கிளி படத்திற்கு, முதல் பரிசு கிடைத்தது. அதை ஆசிரியையிடம் காட்டி, அவருக்கு சமர்ப்பித்தேன்.
தற்போது என் வயது, 48. விசைத்தறி தொழிலாளியாக பணியாற்றுகிறேன். பள்ளி படிப்பு முடிந்த பின், வகுப்பு ஆசிரியையை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே, என் மன வருத்தம். இருப்பினும், சிறுவர்மலர் இதழில் வெளியாகும் குழந்தைகளின் ஓவியங்களை பார்க்கும் போதெல்லாம், வகுப்பு ஆசிரியை ஜெயக்கொடியின் முகம், நிழலாடுகிறது. தற்போதும் நான் வரையும் அனைத்து ஓவியங்களையும், அவருக்கே சமர்ப்பித்து, மகிழ்கிறேன்.
சி.சரவணன், கோவை. தொடர்புக்கு: 98429 20178.

