
மதுரை மாவட்டம், வெள்ளலுார், அரசு உயர்நிலை பள்ளியில், 6ம் வகுப்பு படித்தேன். எங்கள் ஊரில், ஒவ்வொரு ஆண்டும் வல்லவன் கோவில் திருவிழா நடக்கும்.
விழாவில், 15 நாட்களும் கும்மி கொட்டுவர். அதில் அம்மா பாடுவார்; அதை பார்த்து நானும் பாடுவேன். அதில், 'சூரம்பழம் போல வல்லடிகாரய்யா சுத்தும் குடுமியை பாருங்களேன்...' என, ஒரு வரி வரும்.
வல்லடிகாரர் கொண்டை, பெரிதாக இருக்கும்; சூரம் பழம் சிறியதாக இருக்கும். இதனால், பாடல் வரியில், எனக்கு சந்தேகம் எழுந்தது. அம்மாவிடம் இதுகுறித்து கேட்டேன். 'போடி, எதையாவது கேட்பா...' எனக்கூறி, விளக்கம் தரவில்லை.
நான், 9ம் வகுப்பு படிக்கும் போது, தமிழாசிரியராக இருந்தவர், தமிழ்மாறன். இலக்கண பாடத்தை மிக தெளிவாக விளக்குவார். உவமை அணி குறித்து நடத்தும் போது, 'சூரம் பழம் உருவத்துக்கு அல்ல, நிறத்துக்காக சொல்லப்பட்டது' என்பதை, அவர் விளக்கினார். கும்மி பாட்டு வரியில், எனக்கு இருந்த சந்தேகம் அப்போது தீர்ந்தது.
தற்போது, என் வயது, 65. தமிழ் மொழி அமுதம் போன்றது. அதை இலகுவாக்கி, என்னையும் அருந்த செய்த தமிழாசிரியர் தமிழ்மாறனை வணக்கத்துடனும், நன்றியுடனும் நினைவு கூர்கிறேன்.
- மு.சத்தியவாணி, மதுரை.

