
பள்ளியின், 6ம் வகுப்பில், தமிழ் பாடவேளை நடந்து கொண்டிருந்தது.
தமிழாசிரியர் வீரமுத்து வகுப்பு என்றாலே, மாணவர்களுக்கு குதுாகலம் தான். பாடம் மட்டுமின்றி, மாணவர்கள் புதிதாக ஏராளமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர், வீரமுத்து. அவரின் ஒவ்வொரு பாடவேளையும் பாட்டு, கதை, அறிவை துாண்டும் கேள்வி, பதில்கள் என, சுவாரஸ்யமாக இருக்கும்.
அன்றும் அப்படித்தான். பாடப்புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, மாணவர்களை நோக்கி பேசினார், தமிழாசிரியர்.
''உங்களிடம் ஒரு வினோதமான கேள்வி கேட்க போகிறேன். சரியான பதில் சொல்வோருக்கு, மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின், 'அக்னிச்சிறகுகள்' புத்தகத்தை பரிசாக வழங்குவேன்...'' என்றார்.
மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.
''உங்கள் எல்லாருக்கும், கால இயந்திரம் என்றால் என்ன என்று தெரியும்தானே...''
ஆசிரியர் கேட்டதும் உடனே எழுந்தாள், முதல் வரிசையில் இருந்த பாரதி.
''அந்த இயந்திரத்தில் ஏறி, நாம் போக விரும்பும் காலத்தை சொன்னால், அது இறந்த காலமோ, எதிர் காலமோ... அங்கே கொண்டு போய் நம்மை சேர்த்துவிடும் என சொல்வர்...'' என்றாள், அவள்.
''அது மாதிரியான ஒரு இயந்திரம் உங்களுக்கு கிடைத்தால், நீங்கள் எங்கே, எந்த காலகட்டம் செல்ல விரும்புவீர்கள் என்பது தான், என் கேள்வி. சுவாரஸ்யமான பதிலுக்கு, இந்த புத்தகம் பரிசு...'' என்றார், தமிழாசிரியர்.
எல்லாரும் யோசிக்க துவங்கினர்.
''ஆனால்... சில நிபந்தனைகள் உண்டு. கால இயந்திரத்தை, உங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்தக் கூடாது. அதை பயன்படுத்தி, இறந்து போன யாரையும் உயிர்ப்பிக்கக் கூடாது. இவை இரண்டும் முக்கிய நிபந்தனைகள். சிந்தியுங்கள், சிறப்பான பதில் தாருங்கள்...'' என்றார், அவர்.
சில நிமிடங்களுக்கு பின், குமாரசாமி எழுந்தான்.
''அந்த இயந்திரத்தில் ஏறி, காந்திஜி இறந்த தினத்தன்று சென்று, அவரை சாவிலிருந்து காப்பாற்றி...''
அவன் முடிக்கும் முன்பே குறுக்கிட்டார், தமிழாசிரியர்.
''இரண்டாவது நிபந்தனையை மறந்துவிட்டாயா, குமாரசாமி...'' என்று கூறி, அவனை அமரச்சொன்னார்.
அடுத்ததாக, சிவசங்கரி எழுந்தாள்.
''நான் எதிர்காலம் செல்வேன். 400 - 500 ஆண்டுகளுக்குப் பின், அப்போதைய உலகம் எப்படி இருக்கும்; அறிவியல் வளர்ச்சிகள் என்னென்ன; மக்களின் வாழ்க்கை முறை மாற்றம் எப்படி என்றெல்லாம் தெரிந்து கொள்வேன்...''
சிவசங்கரி பதிலில் குறுக்கிட்டார், தமிழாசிரியர்.
''சரி. தெரிந்து கொண்டு...'' என்று, புன்னகைத்தார் அவர்.
அதற்கு மேல் எதுவும் கூற தோன்றாமல், அமைதியாக பெஞ்சில் உட்கார்ந்தாள் சிவசங்கரி.
அவள் அருகே இருந்த, பாரதி மீண்டும் எழுந்தாள்.
''நான், மூன்றாண்டுகளுக்கு முன் செல்வேன்...''
''வெறும் மூன்றாண்டுகளுக்கு முன்பா...''
வியப்புடன் கேட்டார் தமிழாசிரியர்.
''ஆம். கொரோனா என்ற கொடிய நோய் பரவியதே... அதன் ஆரம்ப நாளுக்கு செல்வேன். அந்த நோயால் பாதிக்கப்பட்ட முதல் மனிதனின் நடமாட்டத்தை தடுத்து, அவனை தனிமைப்படுத்தி, அவனது நடவடிக்கைகளை, செயல்பாடுகளை முடக்கியிருப்பேன்...'' என்றாள், பாரதி.
''அப்படி செய்தால்...''
குறுக்கு கேள்வி கேட்டார், தமிழாசிரியர்.
''அவனால் நோயை பரப்பியிருக்க முடியாது... கொரோனாவுக்கு பலியான முதலும், கடைசியுமான ஒரே மனிதனாக அவன் இருந்திருப்பான். அவன் ஒருவனால் தானே, உலகம் முழுவதும் ஏராளமான மனிதர்கள் பாதிக்கப்பட்டு, அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்தது... எத்தனை சிரமங்கள் ஏற்பட்டன... இவை எல்லாம் தடுக்கப்பட்டிருக்கும் அல்லவா...'' என்றாள், பாரதி.
''புத்திசாலித்தனமான பதில்...''
மகிழ்ந்து கை தட்டினார், தமிழாசிரியர்.
''ஆனால், இந்த பதிலில் என் சுயநலமும் கலந்துள்ளது... கொரோனா என்னும் கொடிய நோய்க்கு, என் அன்பான அம்மாவை பலி கொடுத்திருக்க மாட்டேன்...''
பாரதி கூறி முடித்த போது, கண் கலங்கினாள்.
அவளை ஆறுதல்படுத்திய தமிழாசிரியர் வீரமுத்து, புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
கைதட்டலால் அதிர்ந்தது வகுப்பறை.
பட்டூஸ்... வாழ்வில் வெற்றி பெற பள்ளிப்பாடம் மட்டும் போதாது; நல்ல சிந்தனையும் அவசியம்.
நித்யா

