PUBLISHED ON : பிப் 07, 2026

அரண்மனைக்கு வந்த ஞானியை, மரியாதையுடன் வரவேற்றான், அரசன்.
'என்னால் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்க முடியவில்லை...' என்று, ஞானியிடம் முறையிட்டான், அரசன்.
'உன் கடமையை, நீ சரியாக செய்கிறாயா...' எனக் கேட்டார், ஞானி.
'என் நாட்டிற்கு, அன்னியர் பகை இல்லை; கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி வழங்கப்படுகிறது...
'நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கின்றனர். ஆனால், என் மனதில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில், எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை...' என்றான், அரசன்.
'அப்படியானால் நாட்டை என்னிடம் கொடுத்து விடு...' என்றார், ஞானி.
'எடுத்துக் கொள்ளுங்கள்...' என்றான், அரசன்.
'நீ என்ன செய்வாய்...' என்றார், ஞானி.
'எங்காவது போய், ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்...' என்றான், அரசன்.
'எங்கோ போய், தெரியாத வேலையை செய்வதை விட, என்னிடமே வேலை செய்... உனக்கு தெரிந்தது, நாட்டை ஆட்சி செய்வது; அதையே செய். என் பிரதிநிதியாக, நீ நாட்டை நிர்வகித்து வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்...' என்றார், ஞானி.
நாட்டை மீண்டும் அரசனிடமே ஒப்படைத்து புறப்பட்டார். ஓராண்டுக்கு பின், மீண்டும் அரசனை காண வந்தார், ஞானி.
அரசன் இப்போது மகிழ்ச்சியுடன் காணப்பட்டான்.
ஞானியை வரவேற்று உபசரித்த அரசன், நாட்டின் கணக்கு, வழக்குகளை எடுத்து நீட்டினான்.
'அது இருக்கட்டும்...' என்ற ஞானி, 'நீ இப்போது எப்படி இருக்கிறாய்...' எனக் கேட்டார்.
'நிம்மதியாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன்...' என்றான், அரசன்.
'முன் நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்துவரும் பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா...'
ஞானியின் கேள்விக்கு, 'இல்லை...' என்று, பதிலளித்தான், அரசன்.
'முன், மன அழுத்தத்துடன் இருந்த நீ, இப்போது எப்படி நிம்மதியை உணர்கிறாய்...' என்றார், ஞானி.
பதில் கூற முடியாமல் விழித்தான், அரசன்.
அவனுக்கு அறிவுரை கூறினார், ஞானி...
'முன், 'நாடு என்னுடையது' என, எண்ணினாய். இப்போது, 'நாடு எனதில்லை; நான் இங்கு வெறும் பிரதிநிதி தான்' என, எண்ணுகிறாய். 'நான்' என்ற எண்ணம் இருந்த போது, நிம்மதி விலகி, குழப்பம் சூழ்ந்தது...
'இந்த உடல் எனதல்ல; இந்த உயிர் எனதல்ல; எனக்கு அளிக்கப்பட்டது என உணர்ந்தால், கடமையை குழப்பமின்றி நிறைவேற்றலாம்... இந்த மனநிலையில் இருந்து, நாட்டை நீயே நிர்வாகம் செய்...' எனக் கூறி, விடைபெற்றார் ஞானி.
அவரை மரியாதையுடன் வழியனுப்பி வைத்தான், அரசன்.
குட்டீஸ்... 'நான், எனது' போன்ற சுயநல எண்ணங்கள், நமக்கு நிம்மதி தராது.
வி.சி.கிருஷ்ணரத்னம்
