PUBLISHED ON : செப் 12, 2026

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், இ.அமராபதி நாடார் பள்ளியில், 1964ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
வகுப்பாசிரியையாக இருந்த பாக்கியமணி மிகவும் கண்டிப்பானவர். கையெழுத்து திருத்தமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார். என் கையெழுத்து தெளிவாக இருக்காது. கை மணிக்கட்டில் அடித்து தண்டித்து திருத்தி அழகாக்கினார்.
ஆண்டு விழாவில் நாடக பொறுப்பாளராக பணியேற்றிருந்த வகுப்பாசிரியை, 'வசனத்தை தவறில்லாமல் ஒப்பிப்பவருக்கே அந்தந்த பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு...' என அறிவித்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசன் பேசிய வசனத்தை ஒப்பித்து, கட்டபொம்மன் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றேன். மஞ்சள் ஜிகினா ஒட்டிய கிரீடத்தை தலையில் மாட்டி, கரித்துண்டால் மீசை வரைந்து, நடித்து பாராட்டு பெற்றேன். பேனா பரிசாக கொடுத்து, 'உன் தலையெழுத்து நன்றாக அமையும்...' என, வாழ்த்தினார், வகுப்பாசிரியை.
எனக்கு இப்போது, 69 வயதாகிறது. சென்னை, எச்.டி .எல்., நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணியில் இருந்த போதே நாடகப் போட்டிகளில் பங்கேற்று, ஒன்பது முறை சிறந்த நடிகராக விருது பெற்றுள்ளேன். இயக்குனர் ராஜ்முருகன் உருவாக்கிய, மை லார்ட் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றேன். இது போன்ற பெருமைகள் அடைய, அடிப்படை அமைத்து தந்த வகுப்பாசிரியை பாக்கியமணியை போற்றுகிறேன்.
- ச.போத்திலிங்கம், சென்னை. தொடர்புக்கு: 98404 34532
