PUBLISHED ON : ஜூலை 11, 2026

திருச்சி, ஸ்ரீ ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில், 1974ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
ஆங்கில ஆசிரியை ஸ்டெல்லா மேரி, மிகவும் கண்டிப்பானவர். இரு பாலர் படிக்கும் பள்ளி என்பதால், உடை அணிவதில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்துவார். ஒருநாள், என் தாவணி கிழிந்திருந்ததை கவனிக்காமல் அணிந்து சென்றேன். இறைவணக்கக் கூட்டத்தின் போது அழைத்து, கோபமாகத் திட்டினார். மிகவும் அவமரியாதையாக உணர்ந்தேன். மாணவ, மாணவியர் கிண்டலடித்ததால் அழுகை வந்தது.
அன்று முதல் அந்த ஆசிரியையை கண்டால் முகத்தை திருப்பி, வெறுப்பை காட்டி வந்தேன். பள்ளி ஆண்டு விழாவில் ஆங்கில நாடகம் போட முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதில், ஆங்கிலோ இந்திய பெண் பாத்திரத்தில் நடிக்க, தகுதியானவரை தேடினர். எனக்கும் நடிக்க ஆசை வந்தது.
நிறைய பேர் ஆர்வம் காட்டியதால், ஒவ்வொருவராக அழைத்து, வசனம் பேச வைத்தனர். என் முறையின் போது, மற்றொரு ஆசிரியை காதில், ஆங்கில ஆசிரியை ஏதோ கூறியது கண்டு, நம்பிக்கை இழந்தேன். நான் வசனம் பேசி முடித்ததும், 'இந்த ரோலுக்கு சரியாக இருப்பாள்...' எனக் கூறினார், ஆங்கில ஆசிரியை. நம்ப முடியாமல் திகைத்து நின்றேன். சரியானவரால் மட்டுமே ஒருவரின் திறமையை கணிக்க முடியும் என்பதை உணர்ந்தேன்.
தற்போது என் வயது, 64. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். எனக்குள் இருந்த திறனை வெளிப்படுத்த உதவிய ஆங்கில ஆசிரியை ஸ்டெல்லா மேரியை போற்றுகிறேன். அவர் காட்டிய வழியில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்குவித்து வருகிறேன்.
- எம்.முத்துலட்சுமி, சென்னை.
