PUBLISHED ON : ஆக 08, 2026

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமையாசிரியராக பணியாற்றி, 1987ல் விருப்ப ஓய்வு பெற்றிருந்தார், என் தந்தை எஸ்.ராதாகிருஷ்ணன். வகுப்பில் கணித பாடம் நடத்தும் அவரை, வி.ஆர்.எஸ்., என, கனிவு பொங்க அழைப்பர், மாணவர்கள்.
ஒவ்வொரு ஆண்டும், எங்கள் ஊரில், முத்தாலம்மன் கோவில் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக, ரயில்வே உயர் அதிகாரி, இருளப்பனை அழைத்திருந்தனர். என் தந்தையிடம் கற்றிருந்ததால் நிகழ்ச்சி முடிந்த பின், வீட்டிற்கு வந்து நலம் விசாரித்தார், அந்த அதிகாரி.
என் அப்பாவின் உடல்நிலை, 1991ல் பாதிக்கப்பட்டது. குடும்பத்துடன் அவசரமாக, சென்னை செல்ல வேண்டி இருந்தது. கல்லுாரி படிப்பை முடித்திருந்த என்னிடம், 'மதுரையில் அதிகாரி இருளப்பனை பார்த்து, ரயிலில் டிக்கெட் கிடைக்குமா...' என, விசாரிக்க கூறினார், அப்பா. அதன்படி கேட்டவுடன், 'என் கோட்டாவில் வாங்கி தருகிறேன்...' என, உதவியதுடன், ரயில் நிலையம் வந்து என் தந்தையை சந்தித்து நலம் விசாரித்தது கண்டு உருக்கம் ஏற்பட்டது.
என் வயது, 54. இல்லத்தரசியாக இருக்கிறேன். பள்ளி மற்றும் என் தந்தை மீது கொண்டிருந்த மதிப்பால், மனம் கோணாமல் உதவிய அதிகாரி இருளப்பன் செயல், வியப்பு தருகிறது. ஆசிரியர் மீது பற்றுடன் செயல்படுவோரை காணும் போது நெகிழ்ச்சி ஏற்படுகிறது.
- ஆர்.சுப்புலட்சுமி, சென்னை.
தொடர்புக்கு: 63800 87176
