PUBLISHED ON : ஆக 22, 2026

தேனி மாவட்டம், பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லுாரியில், 1977ல், பி.யூ.சி., படித்த போது நடந்த சம்பவம்...
இறுதி தேர்வு முடிந்ததும், 'படித்தது போதும். மேலே படிக்க வைக்க, பணம் இல்லை. அதனால், 'டைப் ரைட்டிங்' கற்றுக் கொள்...' என கூறி விட்டார், அப்பா. மறுப்பு தெரிவிக்காமல், கோடை விடுமுறையில் தொழிற்கல்வி கற்றேன்.
தேர்வு முடிவு வந்ததும், பி.யூ.சி., சான்றிதழை வாங்க சென்றேன். அப்போது, விலங்கியல் பேராசிரியை அருணா தேவராஜ், 'நீ ஏன் மேல் படிப்புக்கு சேரவில்லை? உன் அக்கா இங்கே தானே படிக்கிறாள்...' என விசாரித்தார். அப்பாவின் முடிவை கூறினேன்.
மிகவும் நிதானமாக, 'பணம் தானே பிரச்னை. அதை, மாணவர் நலநிதியில் பெறலாம்...' என அறிவுரைத்து, பட்டப்படிப்பில் சேர விண்ணப்ப படிவம் தந்தார். அதை பூர்த்தி செய்து வாங்கிய பின், 'நாளை, அப்பாவுடன் வா. உன் படிப்புக்கு நிர்வாகத்தில் அனுமதி வாங்கி தருகிறேன்...' என்றார். மறுநாள் சென்றதும், 'இவளுக்கு பின், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். எல்லாரையும் படிக்க வைக்க வசதியில்லை...' என, இயலாமையை எடுத்துக் கூறினார் அப்பா.
உடனே, 'கிராம பெண்கள், கண்டிப்பாக உயர் கல்வி படிக்கணும். பொருளாதார நிலையில் மேம்படணும். உங்க மூத்த மகள் மாதிரியே, மூன்று பெண்களையும் படிக்க வைக்க, இந்த கல்லுாரி நிர்வாகம் உதவும்...' என, உறுதி கூறியது கல்லுாரி நிர்வாகம். அதன்படி, உதவிபெற்று பட்டப் படிப்பை முடித்தோம். நல்ல வேலையில் சேர்ந்து வாழ்வில் உயர்ந்தோம்.
என் வயது, 66. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். வாழ்க்கையில் உயரம் தொட உதவிய, பேராசிரியை அருணா தேவராஜ் பாதம் பணிகிறேன்.
- வி.பவானி, கோவை.
தொடர்புக்கு: 99525 07607
