PUBLISHED ON : ஜூலை 25, 2026

கன்னியாகுமரி மாவட்டம், குறத்தியறை அரசு உயர்நிலைப் பள்ளியில், 1963ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்... வகுப்பாசிரியராக இருந்தார், வித்வான் ஆறுமுகம் பிள்ளை. வெள்ளை வேட்டி, தொள தொளப்பாக கதர் சட்டை அணிந்து, கம்பீரமாக காட்சி தருவார்.
எங்கள் பகுதியில், 'தினமலர்' நாளிதழ் ஒவ்வொரு வீட்டிலும், குடும்ப உறுப்பினர் போல் இடம் பெற்றிருந்தது. அதில் படிக்கும் செய்திகளை சுருக்கமாக எழுதி, அன்றாடம் வகுப்பில் சமர்ப்பிக்க கட்டளை இட்டிருந்தார், வகுப்பாசிரியர். அதன்படி செயல்பட்டு வந்தோம்.
அன்று, பள்ளிக்கு ஒரு விருந்தினர் வந்திருந்தார். வகுப்பாசிரியர் மற்றும் விஞ்ஞான ஆசிரியர் ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன் தோள்களில் கைபோட்டபடி, கம்பீரமாக எங்கள் வகுப்பறையில் நுழைந்தார், விருந்தினர். அந்த புதியவர் முன்னிலையில், அன்று எழுதி வந்திருந்த செய்தி தொகுப்பை வாசித்தேன். அமைதியாக, 'மிகவும் நல்ல பழக்கம் இது... தினமும் இதுபோல் கருத்து ஊன்றி படியுங்கள்; நுால்களையும் வாசியுங்கள். அது உயர்வுக்கு வழி காட்டும்...' என, அறிவுரைத்து சென்றார், விருந்தினர்.
சுதந்திர போராட்ட வீரர், மாமனிதர் ஜீவானந்தம் தான் அந்த விருந்தினர் என்பதை, பல ஆண்டுகளுக்கு பின் தெரிந்து நெகிழ்தேன். உடன் வந்திருந்த விஞ்ஞான ஆசிரியர், பொன்னீலன் என்ற புனைப்பெயரில் மண்மணம் மாறாத கதைகள் எழுதி, புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
என் வயது, 75; தினமலர் நாளிதழில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். படிக்கும் பழக்கத்தை இன்றும் தவறாது கடைபிடித்து வருகிறேன். அதற்கு அடித்தளம் அமைத்த, வகுப்பாசிரியர் ஆறுமுகம் பிள்ளை நினைவை நன்றியுடன் போற்றுகிறேன்.
- ஆ.நடராஜன், சென்னை.
தொடர்புக்கு: 99443 09604
