PUBLISHED ON : ஜூன் 27, 2026

தென்காசி மாவட்டம், சிவகிரி, பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளியில், 1972ல், 11ம் வகுப்பு படித்தேன். வழிகாட்டியாக இருந்து, வாழ்வை சீரமைக்க உதவினர், ஆசிரியர்கள். என் குடும்பம் பற்றி தனிப்பட்ட முறையில் தெரிந்து நல்ல மதிப்புடன் கற்றுத் தந்தனர்.
தமிழாசிரியராக இருந்த, மு.கணேசன் கற்றுத் தந்த பாடங்கள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்தது. கம்பராமாயணம், சிலப்பதிகார செய்யுள்கள், காட்சிகளாக மனதில் பதிந்தன. செய்யுள்களை, புத்தகத்தை பார்க்காமலே நினைவில் இருந்து ஒப்பிக்கும் திறனை பெற்றேன்.
துாண்டுதல் தரும் பொன்மொழியான, 'வாழு, வாழ விடு' என்பதன் பொருளை புரிந்து கொண்டேன். ராமாயண கதாபாத்திரத்தை முன்வைத்து, 'ஊர்மிளையின் ஊமை மனம்' என்ற தலைப்பில் கட்டுரை எழுத கற்பித்தார், தமிழாசிரியர். பிற்காலத்தில் எழுத்தாளராக பரிணமிக்க பயிற்சியாக அது உதவியது.
என் வயது, 69; ஹிந்தி மொழி ஆசிரியையாக பணி செய்கிறேன். முதுமையை வரமாக கருதி, கிடைக்கும் நேரத்தில் எல்லாம் கட்டுரைகள் எழுதி வருகிறேன். ஆண்டாளின் திருப்பாவையை விளக்கும், 'திருமாலும், திருப்பாவையும்' உட்பட, 40க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன்.
பெற்ற மகன்கள் பிரிந்தாலும், கற்ற கல்வி சோறு போடும் என்பதை மெய்பிக்கும் வகையில், உழைத்து பெருமையுடன் வாழ்கிறேன். இதற்கு பள்ளி நாட்களிலே நம்பிக்கை ஊட்டிய, தமிழாசிரியர் மு.கணேசனை போற்றுகிறேன்.
- பானுமதி நாச்சியார், தென்காசி.தொடர்புக்கு: 94425 31504
