PUBLISHED ON : ஆக 29, 2026

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மேல்நிலை பள்ளியில், 1981ல், 10ம் வகுப்பு படித்தபோது, அறிவியல் ஆசிரியராக இருந்தார், மூர்த்தி. தேர்வு நெருங்கும் போது, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவார். அன்று வகுப்பு முடிந்ததும், அருகே இருந்த கடைக்கு அழைத்து சென்றனர் நண்பர்கள். அதில் சிலர், கடைக்காரரை ஏமாற்றி, மிட்டாய் வாங்கினர். அதில் எனக்கும் கொடுத்தனர். நான் வாங்கி கொள்ளவில்லை.
ஏமாற்றப்பட்டதை அறிந்த கடைக்காரர், மறுநாள் ஆசிரியரிடம் கூறிய புகாரில், 'ஒருவன், சிவப்பு நிற சட்டை அணிந்து இருந்தான்...' என அடையாளம் காட்டியுள்ளார். வகுப்புக்கு வந்தவுடன், 'நேற்று யார், சிவப்பு சட்டை போட்டு வந்தவன்...' எனக் கேட்டார் ஆசிரியர். ஆர்வமாக எழுந்து நின்றேன். கை வலிக்கும் வரை, பிரம்பால் அடித்தார். அதே பள்ளியில், என் சகோதரி ஆசிரியையாக பணியாற்றியதால், 'டீச்சர் தம்பி இப்படி செய்வியா...' எனக் கேட்டு, கூடுதல் அடி விழுந்தது.
அதை பார்த்து, தானாக எழுந்து, 'நாங்கள் தான் தவறு செய்தோம்...' என, ஒப்புக் கொண்டனர், நண்பர்கள். அன்று முழுதும் அழுதபடி இருந்தேன். மாலை வகுப்புகள் முடிந்தவுடன், 'நான் தவறு செய்யவில்லையே... என்னை ஏன் அடித்தீர்கள்...' என, அறிவியல் ஆசிரியரிடம் கேட்டேன்.
கனிவுடன், 'நீ தவறு செய்ய மாட்டாய் என, எனக்கு தெரியும். ஆனால், அந்த மாணவர்களுடன் சேர்ந்தது தவறு. கூடா நட்பு கேடாய் விளையும் அல்லவா...' என கூறினார். மனம் சாந்தம் அடைந்தது.
எனக்கு 60 வயதாகிறது; கோவிலில் அர்ச்சகராக பணிபுரிகிறேன். கல்வியை தாண்டி ஒழுக்கத்தை போதித்த அறிவியல் ஆசிரியர் மூர்த்திக்கு மனதில் உயர்ந்த இடம் தந்து போற்றி வருகிறேன்.
- சே.மணிகண்டன், தேனி.
தொடர்புக்கு: 99766 70714
