
'கடல் வாழ் ஜிப்சிகள்' அல்லது 'கடல் நாடோடிகள்' என அழைக்கப்படும், 'பஜாவ்' பழங்குடியினர், தென்கிழக்கு ஆசியாவின் கடலோரப் பகுதிகளில் வசிக்கின்றனர். குறிப்பாக, இந்தோனேசியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் அதிகமாக வாழ்கின்றனர். இவர்கள், கடலோடு பின்னிப் பிணைந்த வாழ்க்கை முறையை கொண்டுள்ளனர்.
பஜாவ் மக்கள், தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை கடலில் கழிக்கின்றனர். மீன்பிடி, கடல் சார்ந்த தொழில்களில் தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டுள்ளனர். கடலையே தங்கள் வீடாகக் கருதுகின்றனர். இவர்களின் வாழ்க்கை முறையும், கலாசாரமும் கடலுடன் பிரிக்க முடியாத அளவுக்கு பிணைந்துள்ளது.
இவர்கள், நீருக்கடியில் நீண்ட நேரம் சுவாசிக்காமல் இருக்க பயிற்சி பெற்றவர்கள்; 5 - 6 நிமிடங்கள் வரை நீருக்கடியில் இருக்கும் திறன் பெற்றவர்கள். உடல் அமைப்பு மற்றும் வாழ்க்கை அனுபவத்தின் காரணமாக, இது சாத்தியமானது.
பஜாவ் இனக்குழுவில் பல குடும்பத்தினர், கடலிலேயே தங்கள் வீடுகளை கட்டியுள்ளனர். இது, அவர்களின் தனித்துவமான வாழ்க்கை முறையின், ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர், படகுகளிலேயே வசிக்கும், நாடோடி வாழ்க்கை முறையை கொண்டுள்ளனர். எனவே, 'ஜிப்சிகள்' என அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறையையே பின்பற்றுகின்றனர். மாறி வரும் நவீன சூழ்நிலைகளிலும், அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை.

