PUBLISHED ON : ஜூலை 04, 2026

இன்று சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்!
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் செல்வந்தர் குடும்பத்தில், ஜனவரி 12, 1863ல், பிறந்தார், நரேந்திரநாத் தத்தா. பின், சுவாமி விவேகானந்தர் என்ற பெயரில் உலக அளவில் புகழ் பெற்றார்.
தந்தை விஸ்வநாத் தத்தா, வழக்கறிஞராக இருந்தார். தாய் புவனேஸ்வரி தேவி, பக்தி மிக்கவர். சிறு வயதிலே அறிவுத்திறனும், நினைவாற்றலும் மிக்கவராக விளங்கினார், விவேகானந்தர். பள்ளிப் பருவத்திலே ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தது, விவேகானந்தர் வாழ்வில், பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
ராமகிருஷ்ணரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டார். அவரது முதன்மை சீடராக மாறினார். ராமகிருஷ்ணர் முக்தியடைந்த பின், துறவறம் மேற்கொண்டார், விவேகானந்தர். மக்களின் ஏழ்மை நிலை, அடிமை மனப்பான்மை கண்டு, மனம் பொறுக்காத விவேகானந்தர், இந்தியாவில் எல்லா பகுதிகளுக்கும் பயணம் செய்தார்.
இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 'எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்...' என, அறிவுறுத்தினார். எழுச்சி மிக்க போதனைகளை வழங்கினார்.
அமெரிக்கா, சிகாகோ நகரில், 1893ல் உலக மதங்கள் மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற விவேகானந்தர் ஆற்றிய உரை, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஹிந்து மதத்தின் பெருமைகளை உலகம் அறிய செய்தார். அனைத்து மதங்களும் ஒன்றே என்ற அவரது கருத்தையும் எடுத்துரைக்க ஏதுவாக அமைந்தது, அந்த நிகழ்வு.
வேதாந்த தத்துவத்தை எளிய முறையில், பாமரருக்கும் புரியும் வகையில் விளக்கினார், விவேகானந்தர். ராமகிருஷ்ண மிஷனை நிறுவி, கல்வி, ஆன்மிகத்தை இணைத்து, இந்தியாவை வழி நடத்தி உயிர்ப்பித்தார். உலகில், 39 ஆண்டுகளே வாழ்ந்தாலும், மக்கா புகழ் பெற்றார். அவரது போதனைகள், இன்றும் இளைஞர்களுக்கு, வெளிச்சமாக ஒளிர்ந்து வழிகாட்டுகின்றன.
விவேகானந்தரின் பிறந்தநாளை நினைவுகூர்ந்தும், இளைஞர் எழுச்சியை போற்றியும், அவர் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதி, தேசிய இளைஞர் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
- வ.முருகன்
