PUBLISHED ON : செப் 19, 2026

உலகின் மிக விலை உயர்ந்த சொகுசு கார்களில் ஒன்றாக, 'ரோல்ஸ் ராய்ஸ் போட் டெயில்' கருதப்படுகிறது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், 2021ல், இதை அறிமுகப்படுத்தியது. இந்த கார், இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகம்.உலகம் முழுதும், மூன்று கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டதால், அரிதான வாகனமாகக் கருதப்படுகிறது.
கடந்த 1930களில் தயாரிக்கப்பட்ட, படகு வடிவ கார்களை முன்மாதிரியாக வைத்து, இதன் பின்புறம் படகு வால் போன்ற அமைப்பில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோச்பில்ட் பிரிவு, இந்த காரை முழுமையாக கைவினைத் திறனுடன் உருவாக்கியுள்ளது. இதன் உருவாக்கத்தில், 1,800க்கும் மேற்பட்ட புதிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
காரின் பின்புறத்தில், பட்டாம்பூச்சி வடிவில் திறக்கும் சிறப்புப் பகுதி உள்ளது.
அதில், உணவு பரிமாறும் மேசை, கண்ணாடிப் பாத்திரங்கள், குளிர்சாதன வசதி, குடை மற்றும் விருந்துக்கான உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட, 5.8 மீட்டர் நீளம் கொண்ட இது, ஆடம்பர வாகன வடிவமைப்பில் புதிய அளவுகோலை உருவாக்கியதாக கருதப்படுகிறது.
- நர்மதா விஜயன்
