PUBLISHED ON : மார் 07, 2026

ஒருவர் பணக்காரர் என்பதை குறிப்பதற்காக, 'அவர் பிறக்கும் போதே, வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்' என்று, சொல்வர்.
தங்கம் தானே விலை உயர்ந்த, அரிதான உலோகம்; அப்படியானால், 'பிறக்கும் போது தங்கக் கரண்டியுடன் பிறந்தவர்' என்று தான் சொல்ல வேண்டும்; ஏன், 'வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்' என சொல்கின்றனர்...
காரணம் இருக்கிறது.
வெள்ளி விலை உயர்ந்த உலோகம் மட்டுமல்ல; தனித்துவம் மிக்கது. அதனால் தான், வெள்ளைத் தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
சில இடங்களில் மட்டுமே துாய வெள்ளி கிடைக்கிறது. மற்ற சுரங்கங்களில், தனிமங்களுடன் சேர்ந்து வெள்ளி எடுக்கப்படுகிறது; பின், துாய்மைப்படுத்தப்படுகிறது. இது தவிர தாமிரம், துத்தநாகம் போன்ற தனிமங்களை சுத்தப்படுத்தும் போதும், வெள்ளி கிடைக்கிறது. குறிப்பாக, 'அர்ஜென்டைட்' என்ற தாதுவில், வெள்ளி அதிகம் இருக்கிறது.
உலகம் முழுதும் ஆண்டுக்கு, 25 ஆயிரம் டன் வெள்ளி எடுக்கப்படுகிறது. சீனா, ரஷ்யா, வட அமெரிக்க நாடான மெக்சிகோ, தென் அமெரிக்க நாடான பெரு, ஐரோப்பிய நாடான போலந்து ஆகியவை உலக அளவில் அதிக வெள்ளி உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளாக உள்ளன.
ஆரம்பத்தில் நாணயங்கள் தயாரிப்பதற்கு, வெள்ளி பயன்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆபரணங்கள், அலங்கார பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. முகம் பார்க்கும் கண்ணாடிக்கு, வெள்ளியில் முலாம் பூசப்படுகிறது.
தொழில்துறையிலும் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 1 கிராம் வெள்ளியை, இரண்டு கி.மீ., நீளத்திற்கு கம்பியாக இழுக்க முடியும். போட்டோ, பிலிம் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டது. மின்சாரத்தை நன்றாக கடத்தக்கூடிய உலோகம் என்பதால், மின்சாதன பொருட்கள் தயாரிக்க வெள்ளி பயன்படுகிறது.
அதுமட்டுமின்றி, கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தது, வெள்ளி. முன்னோர் இதை அறிந்தே வெள்ளிக் குவளைகளில் நீர் அருந்தினர். சாப்பிடுவதற்கு வெள்ளி தட்டு, கரண்டியை பயன்படுத்தினர். இவ்வளவு பெருமைகள் வாய்ந்த வெள்ளியை, பெரும்பாலும் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தினர். அதனால் தான், ஒருவரை பணக்காரர் என்று சொல்வதற்காக, 'அவர் பிறக்கும் போதே வெள்ளி கரண்டியுடன் பிறந்தவர்' என்று கூறுகின்றனர்.

