PUBLISHED ON : ஜூலை 26, 2026

ஜூலை 29 - உலக புலிகள் தினம்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 29ம் தேதி, உலக புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. வாழ்விட இழப்பு, வேட்டை, பருவநிலை மாற்றம் போன்ற பல காரணங்களால் அழிந்து வரும் புலியினம் பற்றியும், அழிவைத் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் விவாதிக்க, ரஷ்ய நாட்டில் உள்ள, 'செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்' என்னும் இடத்தில், 2010ல் உச்சி மாநாடு நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் புலியினத்தின் முக்கியத்துவத்தையும், ஆரோக்கியமான மற்றும் சமநிலையான சுற்றுச்சூழல் அமைப்புக்கு அவை எவ்வளவு அவசியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புலியினத்தை பாதுகாக்கவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
புலிகளைப் பற்றிய சில அரிய தகவல்கள்: * புலிகள் தங்கள் காது, முகம் மற்றும் உடல் மொழி மூலமாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தவை
* புலிகள், தங்கள் காதுகளை பின்னால் சுழற்றி, வாலை ஆட்டி, கண்களை அகலத் திறந்தும், வாயை லேசாகத் திறந்தும் கோபத்தை வெளிப்படுத்தும்
* தற்காப்பு நிலையில் இருக்கும் புலிகள் காதுகளைத் தட்டையாக்கி, பற்களைக் காட்டி, கண்களைச் சுருக்கி வாலைச் சுருட்டிக் கொள்ளும்
* இயல்பாக இருக்கும் புலிகளின் காதுகளும், வாலும் நேராக நிமிர்ந்து இருக்கும். ஒலி அலைகளுக்கேற்ப காதுகளை, 'ராடார்' போல சுழற்றும் திறன் புலிகளுக்கு உண்டு
* மனிதர்களின் கைரேகைகளைப் போலவே, ஒவ்வொரு புலியின் உடம்பில் உள்ள கோடுகளும் வேறு வேறாக இருக்கும். ரோமத்தில் மட்டுமன்றி, தோலின் மீதும் இக்கோடுகள் காணப்படும்
* புலிகள் தனிமை விரும்பிகள். அதனால், இரவில் மட்டுமே இரை தேடச் செல்லும். தனியாக, தங்கள் வசிப்பிட எல்லையையும் பெரியளவில் வரையறுத்துக் கொள்ளும்
* தண்ணீரைக் கண்டால் புலிகளுக்கு மகிழ்ச்சிதான்; நன்றாக நீந்தி விளையாடும்
* ஒரு வேளைக்கு, 60 கிலோ மாமிசத்தை சாப்பிடும். இதனால், சில நேரங்களில் ஒரு வாரம் வரை கூட அவற்றால் எதுவும் உண்ணாமல் இருக்க முடியும்
* குட்டிகள், பிறந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே தாயுடன் இருக்கும். பிறகு பிரிந்து தங்கள் வழியே சென்றுவிடும். இந்த இரண்டு ஆண்டுகளில் நீச்சல், வேட்டையாடுதல் என அடிப்படை வாழ்வாதாரங்களை கற்றுக்கொண்டுவிடும்
* மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் புலிகளின் எண்ணிக்கை அதிகம்.
நம் தேசிய விலங்கான, புலிகளைக் கொண்டாடுவோம்; பாதுகாப்போம்!
மங்கை ஜெய்குமார்
