/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
வேரைக் காப்போம், வாழ்வைக் காப்போம்!
/
வேரைக் காப்போம், வாழ்வைக் காப்போம்!
PUBLISHED ON : பிப் 15, 2026

பிப்ரவரி 21 சர்வதேச தாய்மொழி தினம்!
ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 21ம் தேதி, உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மொழியியல் மற்றும் கலாசார பன்முகத் தன்மையை ஊக்குவிக்கவும், தாய்மொழியை பேணிக் காப்பதன் அவசியத்தை வலியுறுத்தவும், 'யுனெஸ்கோ' எனப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு இந்தத் தினத்தை அறிவித்தது.
இதன் அடிப்படை நோக்கம், மொழியியல் அழிவைத் தடுத்து நிறுத்தி, ஒவ்வொரு மனிதனும் தங்கள் சிந்தனையை, உணர்வுகளை வெளிப்படுத்தும் முதல் ஊடகமான தாய்மொழியைப் பாதுகாப்பதாகும்.
சர்வதேச தாய்மொழி தினத்தின் பின்னணியில் வங்காள மக்களின் உணர்ச்சிமிகுந்த தியாக வரலாறு புதைந்துள்ளது.
கடந்த, 1952 ஆம் ஆண்டு, அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்காளதேசம்) உருது மொழியை மட்டுமே தேசிய மொழியாக அறிவிக்க முயன்றது, அப்போதைய பாகிஸ்தான் அரசு.
இதை எதிர்த்து வங்காள மக்கள், தங்கள் தாய்மொழியான வங்காள மொழியை சமமான தேசிய மொழியாக அறிவிக்கக்கோரி, பிப்ரவரி 21, 1952-ல் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் கொல்லப் பட்டனர்.
மொழிக்காகப் போராடி உயிர்த் தியாகம் செய்தவர்களின் நினைவாகவும், தாய்மொழியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையிலும், 'யுனெஸ்கோ' அமைப்பு, 1999ல் இந்தத் தினத்தை அறிவித்தது. மொழிக்காக ரத்தம் சிந்திய ஒரே தேசமாக, வங்காளதேசம் திகழ்கிறது.
தாய்மொழி என்பது வெறும் தொடர்புக் கருவி மட்டுமல்ல; அது அடையாளம், பண்பாடு மற்றும் சிந்தனையின் அடித்தளம்.
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், தமிழுக்கான தனி மரியாதை உள்ளது. செம்மொழி தகுதியைப் பெற்ற தமிழ், உலகிலேயே மிகத் தொன்மையான, வாழும் மொழிகளில் ஒன்றாகும்.
அறிவியல், உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் பயன்பாடு இன்னும் அதிகரிக்க வேண்டியுள்ளது.
நாம் செய்ய வேண்டியது, நம் தாய்மொழியைப் பேசுவதோடு மட்டுமல்லாமல், அதை அறிவியலிலும், கல்வியிலும், நிர்வாகத்திலும் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். தமிழில் படிப்பது, தமிழில் சிந்திப்பது, தமிழில் எழுதுவது ஆகியவற்றைப் பெருமையாகக் கருத வேண்டும்.
நம் தாய்மொழியான தமிழை அடுத்த தலைமுறைக்கு அதன் முழுப் பெருமையுடன் எடுத்துச் செல்ல வேண்டும்!
****
சர்வதேச தாய்மொழி தினத்தின்போது, 'யுனெஸ்கோ' உலக நாடுகளுக்கு விடுக்கின்ற வேண்டுகோள்:
க ல் வியின் தொடக்கப் படிகளில் தாய்மொழியைப் பயன்படுத்துங்கள். பன்மொழிக் கல்வியை ஆதரிப்பதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குங்கள். சர்வதேச தாய்மொழி தினம் என்பது நாம் கடந்து செல்ல வேண்டிய ஒரு தேதி அல்ல; அது நம் மொழி மற்றும் கலாசாரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு.
பார்வதி ஓமனக்குட்டன்

