/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
பாலைவனத்தை பசுமைக்காடாக்கிய தம்பதி!
/
பாலைவனத்தை பசுமைக்காடாக்கிய தம்பதி!
PUBLISHED ON : ஜன 25, 2026

தென் அமெரிக்காவின் மத்திய கிழக்கு பகுதியில், அமைந்துள்ள ஒரு பெரிய நாடு பிரே சில், இந்நாட்டின் மினாஸ் ஜெரைஸ் என்ற மாநிலத்தில், ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த அட்லாண்டிக் வனப்பகுதி, 20ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில், முழுமையாக அழிந்து, வறண்டு போனது.
புகழ்பெற்ற சுற்றுச்சூழல் புகைப்படக் கலைஞர் செபாஸ்டியானோ சல்கடோ என்பவர், கடந்த 1994ல், தன் குடும்பத்தின் பண்ணை நிலத்திற்கு போகும்போது, சிறுவயதில் பார்த்த பசுமையான காடே அங்கு இல்லை. ஒரு பாலைவனம் போல, வெறும் செம்மண் மேடுகளும், வெயில் கொளுத்தும் வெட்ட வெளியும் மட்டுமே காண முடிந்தது.
'இந்த நிலத்தை மீட்டெடுக்க முடியுமா?' என்று, அவரது மனைவி, லெலியா கேட்ட கேள்வியால் உந்தப்பட்டு, கடந்த 1998ல், தம்பதியர் இணைந்து, 'இன்ஸ்டிட்யூட்டோ டெர்ரா' என்ற அமைப்பை துவங்கினர்.
முதலில் எவரும் அவர்களின் முயற்சியை பொருட்படுத்தவில்லை. உதவி செய்ய முன் வரவுமில்லை. 'வறண்ட மண்ணில், ஒரு செடி கூட வளராது...' என்றனர்.
சல்கடோ - லெலியா தம்பதியர், அவர்களின் எதிர்மறைக் கருத்துகளை பொருட்படுத்தாமல், அந்தப் பகுதி மண்ணில் வளரக்கூடிய மர விதைகளையே சேகரித்து, 2.7 மில்லியன்(1 மில்லியன் - 10 லட்சம்) மரக்கன்றுகளை நட்டனர். செ யற்கை உரங்களை தவிர்த்தனர்.
பத்து ஆண்டுகளில் அதிசயம் நிகழ்ந்தது. மண் ஈரம் பெறத் துவங்கியது. வறண்டு போன நீரூற்றுகள் மீண்டும் பொங்கின. ஓடைகள் பாய்ந்தன. வெப்பநிலை இரண்டு டிகிரி குறைந்து, மழையளவு அதிகரித்தது.
கடந்த, 20 ஆண்டுகளில், 700 ஹெக்டேர் பரப்பளவு, முழுமையான பசுமை காடாக மாறியது. இன்று அந்தக் காட்டில், 172 வகை பறவைகள், 33 வகை பாலுாட்டிகள், 15 வகை ஊர்வன, 289 வகை தாவரங்கள் திரும்பி வந்துள்ளன.
அரியவகை ஜாகுவார் வகை சிறுத்தை, ஒசிலாட் பூனை மற்றும் தபீர் மான் போன்றவையும், மீண்டும் காட்சி தருகின்றன. அழிந்து விட்டதாக கருதப்பட்ட, எட்டு வகை விலங்குகளும் இன்று அங்கு வாழ்கின்றன.
பூமியில், 0.5 விழுக்காடு அளவிலான காடு மட்டுமே மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. 99.5 விழுக்காடு மீட்கப்படுவதற்காக இன்னும் காத்திருக்கிறது.
இவர்களது அமைப்பு, இதுவரை, 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கி, ஆறாயிரம் ஹெக்டேர் நிலத்தை மீட்க உதவியுள்ளது.
உறுதியும், அன்பும் கூட, பூமியை மீட்டெடுக்கும் சுற்றுச்சூழல் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதற்கு, சல்கடோ - லெலியா தம்பதியே சான்று.
சல்கடோ, மே 23, 2025-ல் தன் 81வது வயதில் மறைந்தார்.
மு.ஆதினி

