PUBLISHED ON : நவ 23, 2025

இத்தாலி நாட்டில் உள்ள, லுனிஜியானா மலைப்பகுதியில், பசுமையால் சூழப்பட்டு அமைந்திருக்கிறது, மவுன்ட் ரெஜியோ என்ற சிறிய கிராமம்.
இது, வெறும் ஊர் இல்லை; புத்தகங்களின் பெருமையை உலகிற்கு உணர்த்தும், ஓர் அழகிய இலக்கியப் பூங்கா.
இந்தக் கிராமம், உலகின் முதல், 'புத்தகக் கிராமம்' என்ற, பெருமையை பெற்றுள்ளது. இங்குள்ள ஒவ்வொரு தெரு மற்றும் வீடும் புத்தகங்களால் நிரம்பியிருக்கிறது.
கடந்த, 15ம் நுாற்றாண்டில், சபாஸ்டியானோ என்ற இளைஞன், மவுன்ட் கிராமத்திலிருந்து, வட இத்தாலியில் உள்ள ஒரு முக்கிய நகரான, மிலான் நகருக்கு சென்று, அச்சுக் கலையைக் கற்று வந்தார். அதன்பின், இவர் துவங்கிய புத்தக வியாபாரம், இத்தாலியைத் தாண்டி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் வரை பரவியது.
இங்கிருந்த பலரும், புத்தக வியாபாரிகளாக மாறினர். வெறும் புத்தகங்களை மட்டும் விற்காமல், சுதந்திர எண்ணங்களையும், தரமான இலக்கியங்களையும், மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.
இத்தாலியை ஒருங்கிணைத்த சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டவர்கள், இந்தப் புத்தக வியாபாரிகள்.
இன்று, புத்தகப் பிரியர்களின் கனவு உலகமாகத் திகழ்கிறது, இக்கிராமம். குறுகிய தெருக்களில், பழைய புத்தகக் கடைகள், அரிய நுால்கள், இலவச நுாலகங்கள் என, அனைத்தும் உள்ளன.
ஆண்டுதோறும், ஆகஸ்ட் மாதம் இங்கு நடக்கும் புத்தகத் திருவிழா, உலகம் முழுவதிலிருந்தும் வாசகர்களை ஈர்க்கிறது. இந்த விழாவில், புத்தகங்கள் மட்டுமின்றி, உள்ளூர் உணவுகள், இலக்கிய விவாதங்கள், குழந்தைகளுக்கான கதைகள் என, எல்லாம் கிடைக்கும்.
கடந்த, 1952 முதல் வழங்கப்படும், 'பிரேமியோ பான்கரெல்லா' விருது, இந்த ஊரின் இலக்கியப் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்கிறது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள், புத்தகங்களை வாங்குவது மட்டுமின்றி, தங்களிடமிருக்கும் புத்தகங்களையும் பரிமாறிக் கொள்ளலாம். தெரு முனைகளில் இருக்கும் சிறு நுாலகங்களில், புத்தகங்களை இலவசமாகப் படிக்கலாம்.
வாசிப்பின் மகிழ்ச்சியை உணர விரும்புவோருக்கு, ஓர் அற்புத இடமாக உள்ளது, இது.
இங்கு ஒவ்வொரு புத்தகமும் ஒரு கதவு; அதைத் திறந்தால், அறிவின் புது உலகம் காத்திருக்கிறது.
மு.மகிழினி

