/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்க...
/
மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்க...
PUBLISHED ON : பிப் 22, 2026

தேர்வு காலத்தில், சாப்பிடும் உணவே மாணவர்களின் மூளையை கூர்மையாக அல்லது மழுங்க வைக்கும் என்கின்றனர், ஆய்வாளர்கள். நம் உடலில் உள்ள முக்கிய பாகங்களில், மற்ற உறுப்புகளை விட, மூளையே அதிக சக்தியை செலவழிக்கிறது.
கல்வி கற்கும் போதும் சரி, வேலைக்கு சென்ற பிறகும் சரி, நினைவாற்றல் இன்றியமையாதது. அதை மேம்படுத்த குழந்தைகள் எக்காரணத்தை கொண்டும் காலை உணவை தவிர்க்க கூடாது. அதை தவிர்ப்பது அவர்களின் ஞாபக சக்தி, மனநிலை மற்றும் கவனத்தை பாதிப்பதுடன், உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. எனவே, காலை உணவை தவிர்க்காமல், சத்து நிறைந்த சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு நேரங்களில் மாணவர்களின் மூளைக்கு சீரான குளுக்கோஸ் தேவை. மூளை நீரோட்டத்துடன் இருக்க வேண்டும். இவை அனைத்தும் வழங்கும் உணவுகளை அந்த நேரத்தில் எடுத்துக் கொள்வது அவசியம்.
படிக்கும் மாணவர்களின் காலை உணவில், பாதாம் போன்ற 'நட்ஸ்' வகைகள் மற்றும் பழங்கள் சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். கார்போஹைட்ரேட் உடலில் மெதுவாக சேரும், நினைவுத் திறனும் அதிகரிக்கும். காலையில் அவித்த முட்டை மற்றும் 'மல்டி கிரைன்' ரொட்டி எடுத்துக் கொள்ள, அதிலுள்ள புரோட்டின் மற்றும் கோலின் சத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கும். ஊறவைத்த 5,- 7 பாதாம் பருப்பை தோலை நீக்கிய பின் காலையில் சாப்பிட்டு வருவது, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
தயிருடன் பழம் மற்றும் வறுத்த விதைகள் சாப்பிட, அவை குடலின் நலன் மற்றும் மூளை வளத்தை அதிகரிக்கும். வாழைப்பழம் மற்றும் பாதாம் பால் சேர்த்து சாப்பிட, மூளைக்கு சுறுசுறுப்பை தரும். வாழைப்பழம் மனநிலையை நல்ல நிலையில் வைத்திருக்க உதவும். அதற்கு காரணம் அதிலுள்ள வைட்டமின் பி6.
ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகள் மூளை செல்களை பாதுகாக்க உதவும். 'புளுபெர்ரி' பழம் மற்றும் பூசணி போன்றவற்றின் வறுத்த விதைகளில், ஞாபக சக்தியை அதிகரிக்கும், மெக்னீசியம் மற்றும் துத்தநாக சத்து நிறைந்துள்ளது.
படிக்கும் போது அல்லது தேர்வுக்கு முன், சிறிதளவு, 'டார்க் சாக்லேட்' சாப்பிட்ட மாணவர்களுக்கு வேகமாக நினைவு கூடுதல், அதிக கவனம் மற்றும் மன அழுத்தம் குறைவாக இருப்பதும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
கொண்டை கடலை மற்றும் நிலக்கடலை போன்றவற்றை, 'சாலட்'களில் கலந்து, 'ஸ்நாக்'ஸாக சாப்பிட, அதிலுள்ள நார்ச்சத்து மற்றும் புரதச் சத்து கவனச் சிதறலை தவிர்க்க உதவுகின்றன. மூளையை நீரோட்டமாக வைத்து இருக்க, இளநீர் அல்லது எலுமிச்சை சாறு பருகலாம்.
நெய்யை உங்கள் உணவில் தினசரி ஒரு தேக்கரண்டி சேர்த்துக்கொள்வதால், செரிமான பிரச்னைகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் மூளையின் செயற்பாட்டை சீராக பராமரிப்பதிலும் சிறப்பாக செயலாற்றுகிறது.
மூளையின் ஆற்றலை அதிகரிக்கும், வைட்டமின் பி நிறைந்த சிறு தானியங்கள், முழு கோதுமை, பால் உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளும்போது, உடல் விரைவில் கிரகிக்க வைட்டமின் சி உணவுகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும். வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நினைவாற்றலை அதிகரிக்கவும் துணை புரிகிறது.
தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு இரவு ஆழ்ந்த உறக்கம் அவசியம். எனவே, துாங்கும் முன் மஞ்சள் துாள் சேர்த்து பால் சாப்பிட, நல்ல துாக்கம் வரும். துளசி டீ, அஸ்வகந்தா பால், ராகி பால் வெல்லம் கலந்து சாப்பிட, மூளை அமைதி அடைந்து நல்ல துாக்கம் வரும். உடலில் இரும்பு சத்தும் அதிகரிக்கும்.
ஞான தேவ்ராஜ்

