PUBLISHED ON : ஜன 18, 2026

மத்திய பிரதேச மாநிலம், ரைசன் மாவட்டத்தில், சில்வானி எனும் வனப்பகுதி கிராமத்தை சேர்ந்த, 30 வயதான பழங்குடியின இளைஞர், சோட்டே லால் பிலால்.
இவர், வனப்பகுதியில் இருந்து, சாக்வான் வகை மரங்கள் இரண்டை வெட்டி, மரச்சாமான்கள் செய்யும் கடைக்கு, நாற்காலிகள், பீரோ உள்ளிட்டவை தயாரிக்க, விற்பனை செய்து இருக்கிறார்.
இதையறிந்த வனத்துறையினர், உள்ளூர் நபர் ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சோட்டே லால் பிலால் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய வனத்துறை அதிகாரி, மஹிந்தர் சிங், இறுதியாக, 1.2 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். இவ்வளவு அதிகமான அபராதம் விதிப்பதற்கு, விஞ்ஞான ரீதியான காரணத்தையும் கூறியுள்ளார்.
ஒரு மரத்தின் சராசரி ஆயுள், 50 ஆண்டுகள் என, கணக்கிடப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சியிலும் இது நிரூபணம் ஆகியுள்ளது. இந்த, 50 ஆண்டுகள் ஆயுட்காலத்தில், ஒரு மரத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளின் மதிப்பு, சுமார் 60 லட்சம் ரூபாய் என, ஆய்வுகள் சொல்கின்றன.
அதாவது, ஒரு மரம், தன் வாழ்நாளில், 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆக்சிஜனை வழங்குகிறது. அதேபோல், 24 லட்ச ரூபாய் மதிப்புள்ள காற்று மாசுபாட்டை தடுப்பதில் பங்களிக்கிறது. மண் அரிப்பு மற்றும் நீர் வடிகட்டலைத் தடுக்கவும் உதவுகிறது. இது, மேலும் 24 லட்சம் ரூபாயை சேர்க்கிறது. எனவே, 50 ஆண்டுகளில், ஒரு மரத்திலிருந்து மொத்த நன்மைகள், 60 லட்சம் ரூபாய் ஆகும்.
அந்தவகையில் பார்க்கையில், குற்றம் சாட்டப்பட்டவர், இரண்டு மரங்களை வெட்டி இருக்கிறார் என்ற அடிப்படையில், அவருக்கு 1.2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கியுள்ளார்.
இரண்டு மரங்களை வெட்டியதற்காக, இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படுவது, மத்திய பிரதேசத்தில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜோல்னாபையன்.

