sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : நவ 16, 2025

Google News

PUBLISHED ON : நவ 16, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்பு சகோதரிக்கு -

என் வயது 60. மனைவி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாள். எனக்கு, இரண்டு மகன்கள். இருவரையும், இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளேன். நான், தனியார் நிறுவனத்தில், 'பர்சேஸ்' மானேஜராக இருந்து, ஓய்வு பெற்றேன்.

மகன்களை படிக்க வைப்பதற்காகவும், மனைவியின் மருத்துவ செலவுக்காகவும் பணம் தேவைப்பட்டது. அப்போது, என் அலுவலக நண்பர் ஒருவர் மூலமாக ஒரு பெண்மணியின் அறிமுகம் கிடைத்தது. அவள் கணவர், நல்ல வேலையில் இருந்தாலும், அவள் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தாள்.

அவசரமானதொரு சந்தர்ப்பத்தில், அவளிடம், 5 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். வட்டி கட்ட தாமதமானால், வீட்டுக்கே வந்து, அசிங்கமாக பேசி, வசூல் செய்து போவாள். அவளது கடனை அடைத்து விட வேண்டும் என்பதற்காகவே, என் மனைவியின் நகைகளை விற்று, பாதி தொகையை அடைத்தேன்.

தற்சமயம், என் மகன்களில் ஒருவன், வெளிநாட்டில் வேலை செய்கிறான். இளைய மகன், இங்கேயே இப்போது பணியில் சேர்ந்துள்ளான்.

என் மகன்கள் தலையெடுத்து, அப்பெண்ணின் கடனை முழுவதுமாக அடைத்தனர்.

இப்போது, என் மகன்களின் திருமணத்துக்கு பெண் பார்த்து வருகிறேன். இதை கேள்விப்பட்ட, அப்பெண், தன் இரு மகள்களில் ஒருவளை, என் மூத்த மகனுக்கு திருமணம் செய்து கொடுப்பதாக கூறுகிறாள். இதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், அவள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறாள். அரசியல் பின்புலம் கொண்ட அவள், மிரட்டல் விடுத்தும் வருகிறாள்.

ஒருமுறை, என் மகன் இந்தியா வந்தபோது, நேரிடையாக அவனை சந்தித்து, 'என் மகளை திருமணம் செய்து கொள்...' என்று மிரட்டி உள்ளாள்.

'நாம், வேறு வீடு பார்த்து சென்று விடலாம்...' என்கிறான், என் இளைய மகன்.

'கஷ்டப்பட்டு கட்டிய சொந்த வீட்டை விட்டு செல்வதா என்று எனக்கு தான், தயக்கமாக இருக்கிறது. அப்படியே நாங்கள் வேறு எங்காவது சென்று விட்டாலும், இந்த வீட்டை ஆக்கிரமித்துக் கொள்வாள். வாடகைக்கு விட முயற்சி செய்தாலும், வந்தவர்களை மிரட்டுவாள்...' என்ற பயமும் இருக்கிறது.

அப்பெண்ணின் கணவரை நேரில் சந்தித்து பேசினேன். 'எனக்கும், அவளுக்கும் சம்மதமில்லை. உங்கள் பிரச்னையை நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்...' என்கிறார்.

தினமும், வீட்டு வாசலில் வந்து நின்று, அசிங்கமாக பேசி, அடாவடியாக நடந்து கொள்கிறாள். அந்த தெருவில் இருப்பவர்கள் யாரும், அவளுக்கு பயந்து, எங்களுக்கு ஆதரவாக இருப்பதில்லை.

போலீசிடம் புகார் செய்ய நினைத்தாலும், அங்கும் அவளது செல்வாக்கு தான் நிற்கிறது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, சகோதரி. தகுந்த ஆலோசனை வழங்குவீர்களா?

- இப்படிக்கு, உங்கள் சகோதரன்.

அன்பு சகோதரருக்கு -

ஒரு கந்துவட்டிக்காரி வாய்வழி வன்முறையை பிரயோகித்து சம்பந்தியாக விரும்புகிறாள். இது தானே உங்கள் பிரச்னை.

இப்பிரச்னையை தீர்ப்பதற்கான உபாயங்களை பார்ப்போம்.

* வெளிப்படையாக உங்கள் மகன், அப்பெண்ணின் மகளை திருமணம் செய்து கொள்ள மறுத்தாலும், உள்ளுக்குள் அப்பெண்ணுக்கு மருமகன் ஆக விரும்புகிறானா என்பதை ஆழமாக ஆராயுங்கள். கந்து வட்டியில் அவள் கோடிக்கணக்கில் பணம் சேர்த்திருக்கிறாள்.

அவளுக்கு, மருமகன் ஆனால் அவளது கோடிக்கணக்கான பணத்தை வாரி சுருட்டி விடலாம் என, உங்கள் மகன் மனப்பால் குடிக்கிறானா என்று பாருங்கள். அப்பெண்ணின் கடனை அடைக்கும் போது உங்கள் மூத்த மகனுக்கும், அப்பெண்ணின் மூத்த மகளுக்கும் இடையே காதல் கீதல் வந்ததா என, விசாரியுங்கள். அப்படி இருந்தால், அப்பெண்ணை நீங்கள் சம்பந்தியாக வரித்துக் கொள்ளலாம்

* கந்துவட்டி பெண்ணை நேரில் சந்தியுங்கள். எதற்காக உங்கள் மகனை, அவள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க, துடியாய் துடிக்கிறாள் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உன் கந்துவட்டி தொழிலுக்கு முரணான, என் மகனை, மருமகனாக்கி, என்னை சம்பந்தியாக்கி காலம் முழுவதும் பரஸ்பரம் முட்டி மோதிக் கொள்ள விரும்புகிறாயா? என கேளுங்கள்.

'அப்படி நீ என் மகனை, மருமகனாக்கி கொள்ள விரும்புகிறாய் என்றால், உன் கந்துவட்டி தொழிலை கைவிட நீ தயாரா? வாங்கின கூடுதல் கந்து வட்டிகளை சம்பந்தப்பட்டவருக்கு திருப்பித் தர நீ தயாரா?' என, கேளுங்கள்.

'ஒரு திருமணம் பரஸ்பரம் அன்பு, மரியாதை மற்றும் நம்பிக்கையில் நடக்க வேண்டும். வன்முறையில் நடந்தால், அத்திருமணத்தின் ஆயுட்காலம் என்ன?' என்றும் சந்தேகம் கேளுங்கள்.

'போலீசின் கீழ்மட்டத்தில் உனக்கு செல்வாக்கு இருக்கிறது. அதனால், எங்கள் புகாரை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நாங்கள் புகாரை முதலமைச்சர் அளவிலோ, போலீஸ் கமிஷனர் அளவிலோ அல்லது நேரடி நீதிமன்றத்திலோ பதிவு செய்தால், நீ என்ன செய்வாய்?' என மிரட்டுங்கள்.

'புகார்-, வெட்டு, குத்து,- காயம்,- ஜென்ம விரோதம் தொடர்ந்தால் நஷ்டப்படுவது உன் மகளும், என் மகனும். உன் கடனை, 'செட்டில்' செய்து விட்டேன். நல்ல நண்பர்களாக கைகுலுக்கி பிரிவோம். உன் மகள் திருமணத்திற்கு கூப்பிடு; வந்து வாழ்த்துகிறேன். என் மகன் திருமணத்திற்கு உன்னை கூப்பிடுகிறேன், வந்து வாழ்த்து...' என, ஆணித்தரமாகக் கூறுங்கள்.

* வீட்டைக்காலி செய்யாதீர்கள். இது, ஒரு தற்காலிகப் பிரச்னை. கந்துவட்டிக்காரிக்கு, மருமகன் என்கிற பெயரில் ஓர் அடிமை தேவை. நுாற்றுக்கணக்கான அடிமைகள் அவளது பார்வையில் படுவர். அதில் ஒரு சிறந்த அடிமையை தேர்ந்தெடுத்துக் கொள்வாள். ஒரே ஒரு ஆண்டு தாக்குப்பிடியுங்கள். பிரச்னை மேகங்கள் நகர்ந்து விடும்.

* அவள் வீட்டின் முன் வந்து அசிங்கமாக அடாவடியாக பேசினால், அவளை வீட்டுக்குள் வரவழைத்து காபி கொடுத்து, 'உங்கள் வீட்டில் பெண் எடுக்க நாங்கள் தயாரில்லை. நன்றி போய் வாருங்கள்...' என கூறுங்கள்.

* இடையில் அவளின் தொந்தரவு ஒருமாதம் இல்லாவிட்டால், சொந்தத்தில் வரன் பார்த்து உங்கள் மகனுக்கு எளிமையாக திருமணம் செய்து வைத்து விடுங்கள். நிரந்தரமாய் ஓய்ந்து போய் விடுவாள், கந்துவட்டிக்காரி.

- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us