PUBLISHED ON : மார் 15, 2026

அன்புள்ள அம்மாவுக்கு -
நான், 24 வயது பெண். எம்.பி.ஏ., பட்டதாரி. வங்கி ஒன்றில் அதிகாரியாக பணிபுரிகிறேன். எதிர்காலத்தில் மிகப்பெரிய பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதற்காக தீவிரமாக முயற்சி செய்தும் வருகிறேன்.
என் திருமணத்தை உடனே நடத்தி விட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர், என் பெற்றோர். என்னை விட பெரிய பதவியில் உள்ள மாப்பிள்ளையைத்தான் வலைப்போட்டு தேடுகின்றனர். ஆனால், இப்போது எனக்கு திருமணத்தில் நாட்டமில்லை.
என் வேலையை நான் மிகவும் விரும்புகிறேன். திருமணம் செய்து கொண்டால், என் லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் போய் விடும் என்று பயப்படுகிறேன்.
மேலும், இதுபோல் உயர் பதவி வகித்த சிலரது திருமண வாழ்க்கை தோல்வியடைந்ததை கேள்விப்பட்டுள்ளேன். அடுத்து, அலுவலகத்தில் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ளேன். குடும்ப பொறுப்பை சரியாக செய்ய முடியாத நிலையும் உருவாகலாம்.
நான் வேலை செய்யும் அலுவலகத்தில் நிறைய பெண்கள், அலுவலகம் மற்றும் வீடு என, இரு இடங்களிலும் திறமையாக செயல்பட முடியாமல், அதிருப்தி ஏற்படுவதையும் பார்க்கிறேன். பதவியில் தேக்கம், குடும்ப வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு, விரக்தி மனநிலையில் தான் உள்ளனர்.
எனக்கும் அந்த நிலை வரக்கூடாது என்று நினைக்கிறேன். ஆண் ஆதிக்கம் மற்றும் 'ஈகோ' இல்லாத மணமகன் கிடைப்பானா என்பதும் சந்தேகம் தான்.
என் மனநிலையை என் பெற்றோரிடம் கூறினால், 'திருமணத்துக்கு பின் எல்லாம் சரியாகி விடும். அலை ஓய்ந்த பின், கடலில் இறங்கி நீச்சல் பழகலாம் என்று, கரை ஓரத்தில் நின்றிருப்பதில் ஏதேனும் பலன் உண்டா?' என்று கேட்கின்றனர்.
எனக்கு என்ன முடிவு எடுப்பது என்று புரியவில்லை. நல்ல ஆலோசனை கூறுங்கள் அம்மா.
-இப்படிக்கு, உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு -
திருமணம் என்பது ஒரு சமூக நிறுவனம் மற்றும் தனி நபர்களுக்கு இடையேயான முறைப்படுத்தப்பட்ட கூட்டணி ஆகும். இது, நிலையான குடும்ப அலகை நிறுவுகிறது. தவிர உரிமைகள் மற்றும் கடமைகளின் வலையமைப்பை உருவாக்குகிறது. பாலியல் உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், சந்ததிகளை சட்டபூர்வமாக்குவதற்கும், பொருளாதார ஒத்துழைப்பை வழங்குவதற்கும் உணர்ச்சிப் பூர்வமான ஆதரவை நல்குவதற்கும் திருமணம் உதவுகிறது.
பெண்களில், நான்கு வகை உண்டு.
* ஆடம்பரம், கேளிக்கை, ஒப்பனை மற்றும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் இறங்கி, படிப்பை கைவிடும் பெண்கள்
* நன்கு படித்தும், வேலைக்கு போகாமல் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள்
* புகழுக்காக, பதவிக்காக, ஆண்களின் மீதான வெறுப்புக்காக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விட்டு, முதுமையில் புலம்பும் பெண்கள்
* படித்து வேலைக்கு போய், திருமணமும் செய்து கொண்டு, இரண்டிலும் வெற்றி பெறும் சாதனைப் பெண்கள்.
மேலே சொன்ன, நான்கு பிரிவுகளில், நீ எந்த வகைப் பெண்ணாக இருக்க விரும்புகிறாய்?
ஆணுக்கு மட்டும் தான், 'ஈகோ' இருக்கிறதா, ஆண்கள் மட்டும் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனரா? பணம், புகழ், பதவி கொண்ட பெண்களிடம், 'ஈகோ'வும், ஆதிக்க வெறியும் இல்லையா?
திருமணத்தில் கிடைக்கும் தாம்பத்யம், கவனம் சிதறும் மனதை ஒருமைபடுத்துகிறது. நல்ல கணவன்-மனைவி பரஸ்பரம் கிரியா ஊக்கியாக செயல்படுவர்.
திருமணத்திற்கு பின், மனைவியை படிக்க வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவியாக, காவல்துறை அதிகாரியாக அமர வைத்த கணவர்களை எனக்குத் தெரியும்.
வங்கிப்பணியில் உன் காலை இடறிவிட உனக்கு கீழும், மேலும் பல அதிகாரிகள் இருப்பர். அவர்களை எல்லாம் சமாளித்து வங்கி பணியில் நீ பரிமளிக்கவில்லையா?
எதிர்மறை எண்ணத்துடன் திருமணத்தை அணுகாதே.
ஆர்ப்பரிக்கும் கடலின் மீது, அலைசறுக்கு செய்வது தான் திருமண வாழ்க்கை. சிலிர்ப்பூட்டும் சவாலை சிரமேற்கொண்டு தொழிலிலும், திருமண வாழ்க்கையிலும், இரட்டை வெற்றிபெற வாழ்த்துகள்.
--என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

