PUBLISHED ON : ஏப் 19, 2026

அன்புள்ள சகோதரிக்கு,
நான், 77 வயது முதியவள். கணவர் வயது, 86. ரயில்வே பணியிலிருந்து ஓய்வுபெற்று, தற்போது ஓய்வூதியமாக மாதம், 35 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். சொந்தமாக வீடு கிடையாது. வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறோம். எங்களுக்கு ஒரே மகள். பி.காம்., படித்தவுடன், திருமணம் செய்து வைத்தோம். தற்போது வசதியாக, சொந்த வீட்டில் வசிக்கிறாள். அவளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மாப்பிள்ளை நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு வகையில் எனக்கு உறவு.
வயது மூப்பு காரணமாக கடந்த, ஐந்து ஆண்டுகளாக தோல் அலர்ஜியால் கஷ்டப்படுகிறேன். மருத்துவரிடம் காட்டி, சிகிச்சை பெற்றும் பயன் இல்லை. இதை புரிந்து கொள்ளாத என் கணவர் என்னை அடிக்கடி, 'டார்ச்சர்' செய்வதோடு, வெளிமனிதர்கள் முன் என்னை அவமானப்படுத்துகிறார். இந்த தள்ளாத வயதிலும், அவருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்து வருகிறேன்.
இதைத் தவிர, என் கணவர் பணத்தாசை பிடித்து, வட்டிக்கு பணம் கொடுத்து, பலரிடம் ஏமாந்து விட்டார். எவ்வளவோ புத்திமதி கூறியும், ஏற்காமல் கையில் கிடைத்த பொருளால் என்னை அடித்து துன்புறுத்துகிறார். முன் கோபி. என் சொந்தபந்தங்கள் யாரும் எங்களை பார்க்க வருவதில்லை. கடந்த, ஆறு மாதங்களாக பெற்ற மகளிடமே பேசுவதில்லை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் பேசுவதில்லை. யாரிடமும் பேசக்கூடாது என, நிபந்தனை விதித்துள்ளார்.
நான் ஆன்மிகத்தில் பற்று கொண்டவள். அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று, என்னால் இயன்ற உழவார பணி செய்து, மன நிம்மதி கொள்கிறேன். அதற்கும் தடை விதித்து விட்டார், என் கணவர்.
அழகான பெண்களை கண்டால், 'ஜொள்ளு' விட்டு, அவர்களுக்கு உதவி செய்வதுமாக இருக்கிறார். நான் அவருடன் எங்கும் வெளியில் செல்வது கிடையாது. இருசக்கர வாகனம் வைத்திருக்கிறார். எனக்கு எந்த உதவியும் செய்வது கிடையாது.
காலை எழுந்தது முதல், இரவு வரை, 'டார்ச்சர்' தான். நானே தனியாக மருத்துவமனைக்கு செல்கிறேன். கை செலவுக்கு கூட சரிவர பணம் கொடுப்பது இல்லை. தற்கொலை செய்து கொள்ள துாண்டுகிறது, என் மனம்.
மேலும், அந்தகால புதுமுக வகுப்பான, பி.யு.சி., வரை படித்துள்ளேன். என் கணவர், பத்தாம் வகுப்பு வரை கூட படிக்கவில்லை. ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். திருமணத்திற்கு முன் தனியார் பள்ளியில் நுாலகராக பணியாற்றினேன், நான்.
அவர் பென்ஷனில் எனக்கு பங்கு உண்டு. சிறுசேமிப்பு மற்றும் வங்கி சேமிப்பில், நாமினியாக என் பெயரும், என் மகள் பெயரும் இருக்கிறது. கணவருடன் சேர்ந்து வாழ எனக்கு விருப்பம் இல்லை. என்ன செய்வது?
நல்ல முடிவாக கூறுங்கள், சகோதரி.
— இப்படிக்கு, உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு,
சாதாரணமாகவே, ஆண்கள், 70 வயது தாண்டி விட்டால், 'ஈகோ' சாத்தான் ஆகி விடுகின்றனர். பைத்தியக்கார குரங்குக்கு, தேள் கடித்தது போல, ஓய்வூதிய பணத்தை வைத்துக் கொண்டு குத்தாட்டம் போடுகின்றனர், சிலர். அவர்களின் சர்வாதிகாரம், மனைவி எனும் கொத்தடிமையிடம் கொடி கட்டி பறக்கிறது.
போருக்கு போகும் முன், கணவரிடம் சமாதான உடன்படிக்கை போட முடியுமா என பார், சகோதரி...
கணவரிடம் மனம் விட்டு பேசு. மாதம், 10 ஆயிரம் ரூபாய் உனக்கு பராமரிப்பு தொகை கொடுக்கச் சொல். உன்னை ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்து போய், தோல் நோய்க்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்ள செய்.
யாருக்கும் எந்த சிறுதொகையும் வட்டிக்கு விடக்கூடாது என, நிபந்தனை விதி. மகளிரிடம் நாகரிகமாக நடந்து கொள்ள வற்புறுத்து.
பொதுவெளியில் உன்னிடம் கண்ணியக் குறைவாய் நடக்கக் கூடாது என, கண்டிப்பு வை. 'இதெல்லாம் நீ என்ன எனக்கு சொல்வது, நான் என்ன கேட்பது...' என, உன் கணவர் உன்னிடம் சண்டை இழுக்கக் கூடும்.
இப்போது, கியரை மாற்றிப் போடு.
நீ எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பார்ப்போம்.
குடும்ப நல நீதிமன்றத்தில் அல்லது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 125ன் கீழ் நீ, உன் கணவரின் மீது மனுதாக்கல் செய்யலாம். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, கணவரின் ஓய்வூதியத்திலிருந்து பராமரிப்பு தொகையை பிடித்தம் செய்ய சட்டத்தில் இடமுண்டு.
உன்னை, உன் கணவர் பொருளாதார ரீதியாக புறக்கணிப்பது கூட குடும்ப வன்முறை தான். அதை நிரூபித்தும் நிதி நிவாரணம் பெறலாம்.
நீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும், உன் கணவர் பணம் தரவில்லை என்றால், அவரது ஓய்வூதிய பணத்தை முடக்கி, அதிலிருந்து உனக்கான பணத்தை நீதிமன்றம் வழங்கும்.வழக்கு முடியும் வரை காத்திருக்காமல் உடனடியாக செலவுகளுக்கு பணம் பெற இடைக்கால பராமரிப்பு தொகை கோரி மனு செய்யலாம். தொகை கிடைக்கும்.
நீதிமன்றத்தில் வழக்கு பதிய தேவைப்படும் ஆவணங்கள்.
* திருமணத்திற்கான ஆதாரம் (திருமண புகைப்படம் அல்லது அழைப்பிதழ்)
* கணவரின் ஓய்வூதிய விபரம்
* உன்னுடைய மாதாந்திர செலவுகள்.
பிறகு, உன் கணவரின் அழிசாட்டியம் அடங்கும். நீ போடும் வழக்கு உன்னைப் போல துன்பப்படும் பாட்டிகளுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்க வைக்கும். வாழ்த்துகள்.
— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.
