PUBLISHED ON : ஜூலை 05, 2026

அன்புள்ள அம்மாவுக்கு,
நான், 26 வயது ஆண். ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். எனக்கு ஒரு அண்ணன். வயது, 29. அரசின் வனத்துறையில் பணிபுரிகிறான்.
தன்னுடன் பணிபுரியும் ஒரு பெண்ணை, அவள் காதலனுடன் சேர்த்து வைக்க, நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளான், என் அண்ணன்.
திருமணத்துக்கு நாள் குறித்து, எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
ஆனால், கடைசி நேரத்தில் அப்பெண்ணின் காதலன் வராமல் போக, அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் என் அண்ணனுக்கு ஏற்பட்டது.
என் பெற்றோரும் பெருந்தன்மையாக அப்பெண்ணின் பெற்றோரிடம் பேசி, என் அண்ணனுக்கு அப்பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.
அப்பெண், எங்கள் வீட்டுக்கு வந்த பின், என் அண்ணனுக்கு, பதவி உயர்வு கிடைத்தது. இழுபறியாக இருந்த பூர்வீக சொத்து, என் அப்பா கைக்கு வந்தது போன்ற பல நல்ல விஷயங்கள் நடந்தன. இதற்கெல்லாம் காரணம் மருமகள் தான் என்று அவரை புகழ்ந்து தள்ளுகின்றனர், என் பெற்றோர்.
ஆனால், என் அண்ணனோ, 'இது பொருந்தாத திருமணம். யாருக்கோ வாழ்க்கை பட இருந்தவளை நான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. அவள் காதலித்தவனை தேடி பிடித்தாவது சேர்த்து வைத்து விடணும்...' என்று புலம்பி கொண்டுள்ளான்.
என் பெற்றோர், எவ்வளவோ சமாதானம் செய்தும், அண்ணியுடன் சரிவர பேசாமல், ஒதுங்கியே நிற்கிறான், அண்ணன். என் அண்ணியும், 'எப்போது திருமணத்துக்கு வரவில்லையோ, அப்போதே அவனை மறந்து விட்டேன். இனி, என் வாழ்க்கை இங்கு தான்...' என்று கூறினாலும், அண்ணன் சமாதானமாகவில்லை.
பெற்றோரும் செய்வதறியாமல் தவிக்கின்றனர். இந்த இக்கட்டிலிருந்து அண்ணனை எப்படி மீட்பது? வழி சொல்லுங்கள், அம்மா.
- இப்படிக்கு, உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு,
நண்பரின் காதலுக்கு உதவப்போய் திருமணத்தில் சிக்கினான், உன் அண்ணன். நண்பனின் காதலி, உன் அண்ணனுடன் பணிபுரிந்தவள். மூன்று, நான்கு ஆண்டுகள் பழக்கம் இருந்திருக்கும்.
அந்தப் பெண்ணின் நேர்மறை, எதிர்மறை விஷயங்கள் அனைத்தும் உன் அண்ணனுக்கு தெரிந்திருக்கும்.
ஒரு பெண்ணின் காதலுக்கு உதவலாம். ஆனால், திட்டம் முறிந்து அதே பெண்ணை உன் அண்ணன் திருமணம் செய்து கொண்டது எதிர்பாராத திருப்பம்.
பல விஷயங்களை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கிறான், உன் அண்ணன். திருடனுக்கு தேள் கொட்டியது போல ஒரு திகைப்புறு நிலை.
என்ன காரணத்துக்காக காதலியை திருமணம் செய்து கொள்ளாமல், அந்த காதலன் ஓடி தலைமறைவானான்?
அவன் ஓடிப்போன பின், உன் அண்ணன் அந்தப் பெண்ணை மணந்து கொள்ளும் யோசனையை யார் சொன்னது?
ஓடிப்போனவனுக்கு தன் மனைவியை, தாரைவார்த்துக் கொடுக்க துடியாய் துடிக்கும் உன் அண்ணன், எதற்காக அவளை மணந்து கொள்ள சம்மதித்தான்?
இதுவரை, அந்த காதலனை பற்றிய விபரம் ஏதும் கிடைக்கவில்லையா?
இனி விஷயத்துக்கு வருவோம்.
தெரியாத தேவதையை விட, தெரிந்த பிசாசு மேல் என்பர். திருமணத்திற்கு பின் கணவருக்கு மனைவியும், மனைவிக்கு கணவரும் உண்மையாய் நடந்து கொண்டால் போதுமானது. பதவி உயர்வு-, பூர்வீக சொத்து கைக்கு வந்திருப்பது- இரண்டுமே நல்ல விஷயங்கள் தான்.
இனி, 'மேஜிக்' முழுக்க, உன் அண்ணியின் கைகளில் தான் உள்ளது. அண்ணனுக்கு தேவையானதை செய்து, அன்பாக பேசி பேசி, தன் வழிக்கு கொண்டு வர வேண்டும்.
'இறந்தகாலம் இறந்தது தான். நிகழ்காலமும், எதிர்காலமுமே, இனி நமக்கு முக்கியம். ஒருவருக்கொருவர் உண்மையாய் நுாறாண்டு வாழ்வோம்!' என சூளுரைத்து ஒன்று சேர்ந்து விடுவர். கவலைப்படாதீர்கள்.
விரைவில் சித்தப்பா ஆக, வாழ்த்துகள் மகனே!
- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
