
பா - கே
பீச் மீட்டிங். 'சமீபகாலமாக, அதிகளவில் பஸ்கள் விபத்துக்குள்ளாகின்றன, திடீர் திடீரென தீப்பற்றி எரிகின்றன, பல பயணியர் இறக்கின்றனர் போன்ற செய்திகளை நாள்தோறும் படிக்கிறோம். இதற்கான உண்மையான பின்னணியை ஆராய்ந்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன...' என்று ஆரம்பித்தார், குப்பண்ணா. 'இது என்னவே புது சங்கதி...' என்று கேட்டார், அன்வர் பாய். சொல்ல ஆரம்பித்தார், குப்பண்ணா: கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக சுமை கொண்ட பொருட்கள், பார்சல்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களும் ஏற்றப்படுகின்றன. இவை பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதால், ஆபத்து ஏற்பட வழி வகுக்கிறது.
சமீபத்தில், ஆந்திர மாநிலம், ஹைதராபாத் மற்றும் கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா பகுதியில் நடந்த சம்பவங்கள் இவற்றை உறுதிப்படுத்துகின்றன.
கடந்த, ஏப்ரல் 26, 2025ல், பெங்களூரு - மங்களூரு நெடுஞ்சாலையில் பயணித்த ஒரு தனியார் பேருந்து, தீ பிடித்தது. பயணியர் மயிரிழையில் தப்பியபோதும், இந்த சம்பவம், கர்நாடகா போக்குவரத்து அதிகாரிகளிடையே புதிய எச்சரிக்கையை ஏற்படுத்தியது.
அதேபோல், அக்டோபர் 14, 2025ல், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மாரில் இருந்து, ஜோத்பூருக்கு சென்ற ஒரு தனியார் பேருந்து சந்தேகத்திற்குரிய முறையில், 'ஷாட் சர்க்யூட்' ஏற்பட்டு, தீப்பிடித்து எரிந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட பயணியர் எரிந்து சாம்பலாயினர்.
அதற்கு சில நாட்களுக்கு பின், அக்டோபர் 24, அன்று ஹைதராபாத் - பெங்களூரு சென்ற மற்றொரு பேருந்து தீப்பிடித்து, 20 பேர் உயிர் இழந்தனர்.
பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் தான் தீ விபத்துக்கு காரணம் என, பின்னர் கண்டுபிடித்தனர்.
அடுத்து, டிசம்பர் 25ல், அதிகாலையில், கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள, ஹிரியூர் அருகே, ஒரு தனியார் பேருந்து, எரிபொருள் நிரப்பிய ஒரு கொள்கலனில் மோதி தீப்பிடித்து, ஐந்து பேர் இறந்தனர்; பலர் காயமடைந்தனர்.
பல தனியார் பேருந்துகள், அதிகாரபூர்வமற்ற, சரக்கு கேரியர்களாக, தவறாக பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும், அனுமதிக்கப்பட்டதை விட, அதிக பொருட்களை ஏற்றிச் செல்கின்றன என, கூறுகின்றனர், அதிகாரிகள்.
பயணிகள், குறைந்த எடை உள்ள தனிப்பட்ட பொருட்களை மட்டும் பேருந்தில் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர். ஆனாலும், பல பேருந்துகளின் கீழ், பொருட்களை வைக்கும் பெட்டிகளிலும், கூரைகளிலும் கூட அதிகப்படியான பொருட்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது.
சில சமயம், பேருந்தின் கூரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்கள், இரண்டு முதல் மூன்று அடிக்கு மேல் உயருகின்றன. குறிப்பாக, மலைப் பாதைகளில் பயணிக்கும் போது ஆபத்தை இது கணிசமாக அதிகரிக்கிறது.
இது, பெங்களூரு, மும்பை, வட கர்நாடகா, உடுப்பி மற்றும் மங்களூரு கடலோர பாதைகளில் சகஜமாக நடைபெறும். பார்சல்களை ஏற்ற பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. சில சமயங்களில் பயணியரை விட, அதிக சுமையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
பேட்டரிகள், மின்னணு உபகரணங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் அடிக்கடி பேருந்தில் கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், சிறிய விபத்துகளில் கூட, தீ அல்லது வெடிப்பு ஏற்பட்டு அதிக சேதத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.
பயணியருடன் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்வது சட்ட விரோதமானது என்று தெரிந்தும் பயணியர், எடுத்து செல்வதை போக்குவரத்து அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
சில பேருந்து நடத்துனர்கள், தனியார் பார்சல் நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகின்றனர்.
பயணியரின் பாதுகாப்பை விட, தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும், கமிஷன் தொகைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
அரசு பஸ்களில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படுவதாகவும், பயணியரின் அனுமதிக்கப்பட்ட சுமைகள் மட்டுமே ஏற்றப்படுவதாகவும், மற்றவை ஏற்ற தடை விதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
போக்குவரத்து அதிகாரிகள், காவல்துறை மற்றும் வணிகவரி அதிகாரிகள், ஒருங்கிணைந்து அபராதங்களுடன் விதிமீறல்களை தடுத்து, மேலும் உயிர் இழப்பை தடுக்க முன்வர வேண்டும்.
தனியார் பேருந்துகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் தீ விபத்துகள் மற்றும் விபத்துகளுக்கு சட்டவிரோதமான சரக்குகள் தான் காரணம் என்றும், பயணியருக்கு எவ்வாறு ஆபத்தை விளைவிக்கின்றன என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன, இந்த ஆய்வுகள்.
விபத்துகளும், தீ விபத்துகளும், உயிர் இழப்புகளையும் தடுக்க ஒரே வழி, ஆபத்தான பொருட்களின் மறைமுகமான பயணத்தை கெடுபிடி காட்டி நிறுத்தப்பட வேண்டும், என்று அறிவுறுத்தியுள்ளனர்.
- என்று முடித்தார், குப்பண்ணா. 'உண்மையிலேயே இது, மிகவும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயம் தான்...' என்றேன், நான்.
ப
கம்யூனிச தத்துவத்தை முன்னெடுத்துச் சென்ற எந்த ஒரு தலைவரும், உலக நாடுகள் அனைத்தின் பாராட்டுகளை பெற்றதில்லை. ஆனால், அதற்கு விதிவிலக்காக விளங்கியவர், கியூபா நாட்டின் அதிபர், பிடல் காஸ்ட்ரோ.
கியூபா நாட்டு மக்களின் அமோக ஆதரவை பெற்று, 50 ஆண்டுகள் அதிபராக இருந்தவர். நாட்டு மக்கள் அனைவரையும் நாட்டுப் பற்றாளர்களாக மாற்றியவர். ஒவ்வொரு குடிமகனும், காலையும், மாலையும் அவர்களது, நாட்டு வாழ்த்து பாடலை பாடிவிட்டு தான் எந்தப் பணியையும் செய்ய வேண்டும் என்னும் கொள்கையை தவறாமல் கடைபிடிக்க வைத்தவர்.
அளவோடு ஆசைப்படு, அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதே, உன் தேவைக்கு உன் உழைப்பில் கிடைப்பது மட்டும் போதும் என்ற கொள்கையை தன் நாட்டு மக்களிடையே கடைபிடிக்க வைத்தவர்.
அமெரிக்காவின் ஆயுத விற்பனையை கடுமையாக எதிர்த்தவர், காஸ்ட்ரோ.
அவரை கொல்ல அமெரிக்கா பல முறை முயற்சி செய்தது.
காஸ்ட்ரோவின் வேலையாளை விலைக்கு வாங்கி அவன் மூலம் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்தனர்.
காஸ்ட்ரோவின் காதலியை தந்திரமாக தன்வசப்படுத்தி, அவருக்கு எதிராக செயல்பட வைத்தனர். காஸ்ட்ரோ கலந்து கொண்ட விருந்தில், விஷ உணவை வைத்து கொல்ல பார்த்தனர். அவரை நோக்கி, 300 முறைக்கு மேல் துப்பாக்கிச்சூடு நடத்தி பார்த்தனர். ஆனால், அவரை கொல்ல அமெரிக்காவால் முடியாமல் போனது.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

