PUBLISHED ON : மே 31, 2026

ச.கண்ணன், வத்தலகுண்டு: நாட்டு மக்களுக்கு இலவசங்கள் தேவையா? 'நறுக்'கென்று ஒரு வரியில் சொல்லுங்கள்?
தேவையில்லை என்பதை, இந்த தேர்தல் தான் எடுத்துக்காட்டி விட்டதே, கண்ணன்!
கே.ஆர்.அசோகன், ஈரோடு: அரசு ஊழியர் போல், மதிய சாப்பாட்டுடன் பணிக்கு வரும் முதல்வர், விஜய் பற்றி உங்கள் கருத்து?
முதல்வர் விஜயின் எளிமை, அனைவரையும் கவர்கிறது. அதை அவர், ஐந்து ஆண்டு காலமும் தொடர்ந்தால், அவர் தான், 'கில்லி!'
ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு: 'நட்சத்திர புகழ் நிலையானது அல்ல. 'வாழும் கலை' ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆசிரமத்துக்கு நான் வந்தபோது, மக்கள் என்னை சூழ்ந்து கொள்வர் என, நினைத்தேன். ஆனால், ஒருவர் கூட என்னை கண்டுகொள்ளவில்லை. உண்மையான நட்சத்திர அந்தஸ்து என்பது, ஆன்மிக அனுபவம் தான்...' என்ற நடிகர், ரஜினிகாந்தின் அறிவுரை பற்றி, என்ன நினைக்கிறீர்கள்... '
ரஜினி ஆன்மிக பாதைக்குச் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதே... இப்போது தான் இது புரிந்ததா அல்லது 'வேறு யாரையோ' மனதில் வைத்து இதைச் சொல்கிறாரா...' என, எண்ணத் தோன்றுகிறது!
வெ.பரமசிவன், செங்கல்பட்டு: சென்னையில் ஒரே நாளில், 'ஸ்பெஷல் டிரைவ் ஆப்பரேஷன்' என்ற பெயரில், 100 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...
சென்னை மட்டுமல்ல; அனைத்து மாவட்டங்களிலும், ரவுடிகளை, 'நெம்பி' எடுக்கும் பணி நடந்து வருகிறது. நல்ல பலன் ஏற்படப் போகிறது என்பதை, பார்க்கத் தானே போகிறோம்!
* ஜி.அர்ஜுனன், திருப்பூர்: 'தொலைக்காட்சிகளாகட்டும், பத்திரிகைகளாகட்டும்... உள்ளதை உள்ளபடி, மக்களுக்குச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது...' என்கிறாரே, தி.மு.க., செந்தில் பாலாஜி ...
ஆஹா... சொல்லலாமே! பலரும், 'உள்ளே' போக வேண்டி இருக்கும்! 'ஓகே'வா, செந்தில் பாலாஜிக்கு!
ம.லெட்சுமி, நாகப்பட்டினம்: தமிழகத்தில் உள்ள, 'அம்மா உணவகங்களை' சீரமைத்துப் புதுப்பிக்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத் தகுந்தது தானே...
சபாஷ் போடலாம், விஜய்க்கு! அம்மா உணவகங்கள், பல எளியவர்கள் பசியாற உதவிய திட்டம்; அதை சரிவர மீட்டெடுத்தால், பலருக்கும் உதவியாக இருக்கும்!
பெ.பொன்ராஜ பாண்டி, மதுரை: போதைப்பொருள் ஒழிப்பில், விஜய் அரசு காட்டும் அக்கறையை, கடைசி வரை செயல்படுத்த முடியுமா?
'மூட்டையில் முளைத்த நெல்லை, மற்ற நெல் மூட்டைகள் மேல் வைத்து போட்டோ எடுத்து, பத்திரிகையில் வெளியிடுகின்றனர்....' என, முதல்வர் விஜயின் கண்ணை மறைக்கும் வகையில், அதிகாரிகள் பொய் சொன்னது போல், போதைப் பொருள் ஒழிப்பு விவகாரத்திலும் நடந்து கொண்டால், விஜய் பெயர் கெடும். முதல்வர் விஜய், அதிகாரிகளுக்கு, கடிவாளம் போட்டு, அதன், மறு முனையை கையில் இறுக பிடித்துக் கொள்வது நல்லது!
எம்.சிவா, ராமநாதபுரம்: உளவுத்துறை, ஐ.ஜி.,யாக, அஸ்ரா கர்க் நியமனம் பற்றி உங்கள் கருத்து என்ன, அந்துமணி?
சரியான தேர்வு. அஸ்ரா கர்க், நேர்மையா ன அதிகாரி. உளவுத்துறையை மேம்படுத்த அவர், நிறைய மெனக்கெட வேண்டும். முதல்வர் விஜய், காவல்துறைக்கு மேலும் சரியான அதிகாரிகளை தேர்வு செய்ய வேண்டும்!
* கே.எம்.இளங்கோ, சென்னை: ஸ்டாலினை தோற்கடித்த கொளத்துார் மக்கள் கேடு கெட்டவர்கள் என்று, தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர், அனிதா ராதாகிருஷ்ணனும், ஆபாச வார்த்தைகளால் கூட்டணியினரை திட்டுகின்றனரே...
இத்தகைய அகங்கார பேச்சுக்கள், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, அதிக கெட்ட பெயரைச் சேர்த்து விடும்; அனிதா, ராஜா போன்றோரை அடக்கி வைக்க வேண்டியது, கட்சிக்கு தற்போதைய அவசர அவசியம்!
ஆர்.அபிஷேக மணி, கடலுார்: 'நாங்கள் நாற்காலியை தேடிச் செல்ல வேண்டியதில்லை. அது எங்களைத் தேடி வரும்...' என, வி.சி., கட்சி திருமாவளவன் கூறுகிறாரே...
நாற்காலிக்கு பதில், புதிய, 'சோபா செட்' தான் அவர் வீடு தேடி வந்ததே!
எம்.பாஸ்கர், தஞ்சாவூர்: 'தி.மு.க., - அ.தி.மு.க., வேண்டாம் என்பது தான், மக்கள் தீர்ப்பு...' என்கிறாரே, காங்.,கின் கார்த்தி சிதம்பரம்...
விஜயின், த.வெ.க.,வுடன் ஒட்டிக் கொண்டு விட்டதால், ஏறிய ஏணியை எட்டி உதைக்கும் தைரியம் வந்துவிட்டது அவருக்கு!
* எஸ்.யோகா, கோபி: எடுத்த எடுப்பிலேயே, 717 'டாஸ்மாக்' கடைகள் மூடல்; இரவு, 10:00 மணிக்கு மேல், ஒரு நிமிடம் கூட, 'டாஸ்மாக்' திறந்திருக்க கூடாது என, விஜய் அதிரடி காட்டினால், 'குடிமகன்'கள், த.வெ.க.,வை வெறுத்து, அடுத்த தேர்தலில், 'கவிழ்த்து' விடுவரே...
முதலில் வெறுப்பர்; ஆனால், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் போது, அவர்களும், அவர்களது குடும்பத்தினரும், விஜயை கொண்டாடத் துவங்கி விடுவர்!
* சி.ரகுமுருகன், விழுப்புரம்: 'அ.தி.மு.க., என்ற ஆலமரத்தை சாய்க்கப் பார்க்கின்றனர்...' என, அக்கட்சியின் பொதுச்செயலர், பழனிசாமி வேதனைப்படுவது சரியா?
தன் முக்கியத்துவத்தை மட்டுமே மனதில் இருத்தி, அ.தி.மு.க.,வை இவர் சாய்த்தது போதாதா... இவர் போக்கு, நோக்கு சரியில்லை என்பதால் தானே, மற்றவர்கள் இவரை விட்டு கிளம்புகின்றனர்... போகிற போக்கில், தன்னைத்தானே இவர், கட்சியிலிருந்து நீக்கி விடுவார் போலிருக்கிறது!
* மு.நாகூர், ராமநாதபுரம்: 'பத்திரப்பதிவு அலுவலகங்களில், பொதுமக்களை நாற்காலியில் அமர வைத்து பேச வேண்டும்...' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறித்து...
'கிம்பளம்' புழங்கும் துறைகளில் முதன்மையானது, பத்திரப் பதிவுத்துறை. அங்கு சாட்டையை சுழற்றத் துவங்கியுள்ளார், முதல்வர் விஜய். 'முதலில், மக்களை மரியாதையுடன் நடத்துங்கள்...' என்பது தான், இதன் பொருள். சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் நல்லது!
இ.முருகன், சென்னை: தமிழக அமைச்சரவையில், 60 ஆண்டுகளுக்கு பின், காங்கிரஸ் இடம் பெற்றுள்ளதே... அக்கட்சிக்கு இனி வளர்ச்சி தானே...
தென் மாநிலங்களில் கர்நாடகா, கேரளாவை அடுத்து, தமிழகத்திலும் அமைச்சரவையில் காங்., இடம் பெற்றுள்ளது, அதன் சாதனையே! ஆனால், தனித்து நின்று வெற்றி பெறும் அளவுக்கு வளர்வது, அதன் தலைவர் கையில் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்!
பா.ஜெயப்பிரகாஷ், தேனி: 'தெரியாமல், த.வெ.க.வுக்கு ஓட்டு போட்டுட்டோம் என, மக்கள் புலம்புகின்றனர்...' என்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளாரே...
பெரிய தோல்வியை, இப்படிப் புலம்பித் தீர்த்து மறைக்கிறர்; பாவம், விட்டு விடுவோம்!
த.குஞ்சிதபாதம், சிதம்பரம்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, சீனாவில் தரப்பட்ட பரிசுகளை, அமெரிக்க அதிகாரிகள், குப்பையில் வீசிவிட்டுச் சென்றனராமே...
பெரிய அவமரியாதை இது. அமெரிக்க நிர்வாகத்துக்கு, எப்போதுமே இந்தப் பழக்கம் தான். குப்பைத் தொட்டியோடு சென்று, பரிசுகளை அதில் போட்டு மறைமுகமாக அப்புறப்படுத்துவது அவர்களது வழக்கம்; இம்முறை வேண்டுமென்றே, சீன அரசின் கவனத்திற்கு தெரியும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். வெட்கக்கேடு!
