PUBLISHED ON : ஜூலை 19, 2026

ரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி, தேனி: கடந்த சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட மாற்றங்கள், மக்களின் விழிப்புணர்வால் மட்டும் தான் ஏற்பட்டதா?
ஆமாம். மற்ற கட்சிகளை தொடர்ந்து கண்காணித்து, மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டனர். த.வெ.க., மற்ற திராவிட கட்சிகளைப் பின்பற்றாமல் இருந்தால், இன்னும் பல ஆண்டுகளுக்கு, இந்த கட்சியின் ஆட்சியே தொடரும்!
கே.நாகராஜன், செங்கல்பட்டு: நீர் வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சிக்கு உட்பட்ட 1,164 ஏரிகளில், இலவசமாக வண்டல் மண் எடுக்க, விவசாயிகளுக்கு, மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு, அனுமதி அளித்துள்ளதாமே, தமிழக அரசு...
பல ஆண்டுகளுக்குப் பின், இத்திட்டம் உயிர் பெற்றுள்ளது. இதனால், ஏரிகள் சுத்தமாகி, நீர் நிரம்பும்; விவசாய நிலங்கள் செழிக்கும். இடைத்தரகர்களின் சுரண்டல் இன்றி, இத்திட்டம் நிறைவேற வேண்டும்.
பி.ராஜேஸ்வரி, மதுரை: கச்சா எண்ணெய் கொடுத்த ரஷ்யாவுக்கு, நம் நாடு பெட்ரோல் அனுப்புகிறதே...
ஈரானின் முதல்கட்ட போரின் போது, ரஷ்யா நமக்கு, கச்சா எண்ணெய் கொடுத்து உதவியது. அதற்கு நன்றியாக நாம் இப்போது பெட்ரோல் கொடுக்கிறோம்!
தி.மகாராஜன், தேனி: 'நேருவே எங்களைப் பார்த்து அஞ்சுவார்; மாணிக்கம் தாகூர், நேற்று முளைத்த காளான்...' என, காங்., கட்சியை கேவலப்படுத்துகிறாரே, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி...
'நேற்று முளைத்த காளான்...' என, த.வெ.க.,வினரை நினைத்ததால் தான், சட்டசபை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தது, தி.மு.க., ஆர்.எஸ்.பாரதி, சினிமா நடிகர் வடிவேலுவைப் போல பேச ஆசைப்படுகிறார் போலிருக்கிறது. நேருவை நேரில் பார்த்தவர் போலவே பேசுகிறார்! நேரு காலமானபோது, பாரதி, பள்ளிப்படிப்பைத் தான் முடித்திருப்பார்!
* கி.பாலமுருகன், ராமநாதபுரம்: சுயமாக போர்க்கப்பல் தயாரித்து, ராணுவத்தில் பயன்படுத்தும் வல்லமையுடன் இருப்பது, நம் தேசத்துக்கு பெருமை தானே...
போர்க்கப்பல் தயாரிப்பது மட்டுமா... பல ராணுவ தளவாடங்களை தயாரித்து, ஏற்றுமதியும் செய்கிறோம்; விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட், அதன் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இன்ஜின்கள் என, வெளிநாட்டினர் வாயைப் பிளக்கும் வகையில் முன்னேறியுள்ளோம். பெருமைப்படுவோம், பாலமுருகன்!
* ஜி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை: லஞ்சம் காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில், 25 நிறுவனங்களின், 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும், 3.30 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டங்கள், பிற மாநிலங்களுக்கு சென்று விட்டதாக, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளாரே...
தி.மு.க.,வினரிடமிருந்து இதற்கு இன்னும், முழுமையான பதில் வரவில்லை. அமைச்சர் கீர்த்தனா, பேச்சோடு நிறுத்திக்கொள்ளாமல், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்த்து, நம் மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப் படுத்தப் போகிறாரா என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்!
எல்.மூர்த்தி, கோவை: ' மெக்கானிக்' ஆக இருந்து, கண்டக்டர் பணிக்குச் சென்ற, தி.மு.க., முன்னாள் அமைச்சர், எ.வ.வேலுவுக்கு, பல்லாயிரம் கோடி ரூபாய், சொத்துக்கள் வந்தது எப்படி?
எல்லாம், 'போடப்படாத' சாலைகளின், 'டெண்டர்' காசு தான். அவற்றுக்கும், தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல், 'தானே சம்பாதித்த காசில்' சிங்கப்பூர் சென்று, சிகிச்சை பெறுகிறார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்!
